தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின், மே.7 ஆம் தேதி பொறுப்பேற்று கொண்டார். அன்றைய தினம் கரோனா நிவாரண திட்டம், பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என, அதிரடியாகப் பல அறிவிப்புகளை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து பலரும் முதலமைச்சரின் நடவடிக்கைகளுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடியே, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தார். அதன் முதல் தவணையாக ரூபாய் 2,000 நிவாரணத் தொகை வழங்குவதற்கான அரசாணையில் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
இந்நிலையில், அரிசி பெறும் 2 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரத்து 950 குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணத் தொகையின் முதல் தவணையான ரூபாய் 2 ஆயிரம் இன்று (மே.15) முதல் அளிக்கப்படவுள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நிவாரணத்தை வழங்க வேண்டும் என கூட்டுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.