சென்னை:சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் L. நந்தகுமார் லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்டு வரும் விசாரணை குறித்தும் விவரித்து, அவரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என முதலமைச்சர், உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறப்போர் இயக்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த இயக்கம் எழுதிய கடிதத்தில், "2015ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சென்னை மாநகராட்சியின் 400 பேருந்து நிழற்குடை டெண்டரில் ஊழல் மற்றும் பணமோசடிக்கு எதிராக அறப்போர் இயக்கம் DVAC-க்கு கடந்த ஆண்டு மார்ச் 23 அன்று புகார் அளித்துள்ளது. அப்போது நந்தகுமார், சென்னை மாநகராட்சியின் கண்காணிப்பு பொறியாளராக இருந்தார். DVAC தற்போது இந்தப் புகாரை முதற்கட்ட விசாரணை மூலம் விசாரித்து வருகிறது. இந்த டெண்டர்கள் அனைத்தும் மோசடியான டெண்டர் மூலம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய உதவியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
2015ஆம் ஆண்டு இந்த டெண்டர் விடப்பட்டபோது எல்.நந்தகுமார் BRR-இன் பொறியாளராக இருந்தார். அவர் டெண்டர் மற்றும் பிற சட்டங்களை மீறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய உதவியாளர்களுக்கு டெண்டர் வழங்குவதற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார்.
15 ஆண்டுகளில் 400 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நீண்ட காலத்திற்கு முன்பே அவர் செய்த செயல்களுக்காக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், அவரை இப்போதும் உடனடியாகவும் இடைநீக்கம் செய்ய வேண்டும். அவர் இந்த மாதம் 31ஆம் தேதி ஓய்வு பெற இருக்கிறார்.