சென்னை:சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், நிலத்தடி பாறை அமைப்பை வகைப்படுத்தி பெட்ரோலியம் - ஹைட்ரோகார்பன் கையிருப்பு வளத்தைக் கண்டறியக் கூடிய புள்ளிவிவர அணுகுமுறையை உருவாக்கி உள்ளனர். மேல் அசாம் படுகையில் திப்பம் மணற்கல் அமைந்துள்ள பகுதியில் ஹைட்ரோகார்பன் செறிவூட்டல் மண்டலங்கள் தொடர்பான மிக முக்கிய தகவல்களை வழங்குவதில் இந்த முறை வெற்றிகரமாக அமைந்துள்ளது.
நில அதிர்வு குறித்த ஆய்வுகள், வடக்கு அசாம் பிராந்தியத்தில் பெட்ரோலிய கையிருப்பைக் கண்டறிய ஆழ்துளைக் கிணறுகளில் எடுக்கப்படும் தரவுகள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்ய ஆராய்ச்சியாளர்கள் இந்த முறையைப் பயன்படுத்தினர். 2.3 கி.மீ. ஆழத்தில் உள்ள பாறை வகை பரவல் மற்றும் ஹைட்ரோகார்பன் செறிவூட்டல் மண்டலங்கள் தொடர்பான மிகத்துல்லியமான தகவல்கள் அவர்களுக்குக் கிடைத்தன.
நிலத்தடியில் உள்ள பாறைகளை வகைப்படுத்துவது என்பது சவாலான பணியாகும். நில அதிர்வு ஆய்வுமுறைகள், ஆழ்துளைக் கிணறுகளின் பதிவுத் தரவுகள், பூமியின் மேற்பரப்புக்கு அடியில் உள்ள கட்டமைப்பைப் புரிந்து கொள்ளப் பயன்படுத்தப்படுகின்றன. நில அதிர்வு ஆய்வின்போது, ஒலி அதிர்வுகள் தரைவழியாகவே அனுப்பப்படுகின்றன.
அலைகள் பல்வேறு பாறை அடுக்குகளைத் தாக்கும்போது, அவை வெவ்வேறு சிறப்பு இயல்புகளைப் பிரதிபலிக்கின்றன. இவ்வாறு பிரதிபலிக்கும் அலைகள் பதிவு செய்யப்பட்டு, நிலத்தடிப் பாறை அமைப்பு தரவுகளைப் பயன்படுத்தி படம்பிடிக்கப்படுகிறது. எண்ணெய்க் கிணற்றைத் தோண்டும்போது காணப்படும் பூமியின் பல்வேறு அடுக்குகள் தொடர்பான விவரங்கள் ஆழ்துளைக் கிணறுக்கான பதிவுகளில் இடம்பெற்றுள்ளன.
சென்னை ஐஐடி பெருங்கடல் பொறியியல் துறையின் (Ocean Engineering) பெட்ரோலிய பொறியியல் திட்ட ஆசிரியரான பேராசிரியர் ராஜேஷ் ஆர்.நாயர் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
100 ஆண்டுகளுக்கு முன், மேல் அசாமில் டிக்பாய் எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே, அசாம் - அரக்கன் படுகைப் பகுதி கணிசமான அளவுக்கு ஹைட்ரோகார்பன் இருப்பு இருப்பதைக் குறிப்பிடும் விதமாக ‘பிரிவு-1’ல் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஹைட்ரோகார்பன் செறிந்த பாறை அமைப்புகளில் துளையிடக்கூடிய இடங்களில் பெட்ரோலியம் காணப்படுகிறது. அசாமின் எண்ணெய்வளம் மிகுந்த படுகைகளில் பெட்ரோலியம் எங்கு கிடைக்கும் என்பதை அறிய, அங்குள்ள பாறை அமைப்பு பற்றி ஆய்வு செய்வதுடன், அவற்றில் ஹைட்ரோகார்பன் செறிவூட்டக்கூடிய பகுதிகளையும் கண்டறிய வேண்டி உள்ளது.