தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேல் அசாமில் 2.3 கி.மீ. ஆழத்தில் ஹைட்ரோகார்பன் செறிவூட்டல் மண்டலங்கள்!

மேல் அசாம் வடிநிலப் பகுதியில் 2.3 கி.மீ. ஆழத்தில் உள்ள பாறை வகை பரவல், ஹைட்ரோகார்பன் செறிவூட்டல் மண்டலங்கள் தொடர்பான மிகத்துல்லியமான தகவல்கள் அவர்களுக்குக் கிடைத்தன என பெட்ரோலியப் பொறியியல் திட்டப் பேராசிரியரான ராஜேஷ் ஆர்.நாயர் தெரிவித்துள்ளார்.

By

Published : Dec 30, 2022, 6:54 PM IST

மேல் அசாம் வடிநிலப் பகுதியில் 2.3 கி.மீ. ஆழத்தில் ஹைட்ரோகார்பன் செறிவூட்டல் மண்டலங்கள் கண்டுபிடிப்பு
மேல் அசாம் வடிநிலப் பகுதியில் 2.3 கி.மீ. ஆழத்தில் ஹைட்ரோகார்பன் செறிவூட்டல் மண்டலங்கள் கண்டுபிடிப்பு

மேல் அசாம் வடிநிலப் பகுதியில் 2.3 கி.மீ. ஆழத்தில் ஹைட்ரோகார்பன் செறிவூட்டல் மண்டலங்கள் கண்டுபிடிப்பு

சென்னை:சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், நிலத்தடி பாறை அமைப்பை வகைப்படுத்தி பெட்ரோலியம் - ஹைட்ரோகார்பன் கையிருப்பு வளத்தைக் கண்டறியக் கூடிய புள்ளிவிவர அணுகுமுறையை உருவாக்கி உள்ளனர். மேல் அசாம் படுகையில் திப்பம் மணற்கல் அமைந்துள்ள பகுதியில் ஹைட்ரோகார்பன் செறிவூட்டல் மண்டலங்கள் தொடர்பான மிக முக்கிய தகவல்களை வழங்குவதில் இந்த முறை வெற்றிகரமாக அமைந்துள்ளது.

நில அதிர்வு குறித்த ஆய்வுகள், வடக்கு அசாம் பிராந்தியத்தில் பெட்ரோலிய கையிருப்பைக் கண்டறிய ஆழ்துளைக் கிணறுகளில் எடுக்கப்படும் தரவுகள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்ய ஆராய்ச்சியாளர்கள் இந்த முறையைப் பயன்படுத்தினர். 2.3 கி.மீ. ஆழத்தில் உள்ள பாறை வகை பரவல் மற்றும் ஹைட்ரோகார்பன் செறிவூட்டல் மண்டலங்கள் தொடர்பான மிகத்துல்லியமான தகவல்கள் அவர்களுக்குக் கிடைத்தன.

நிலத்தடியில் உள்ள பாறைகளை வகைப்படுத்துவது என்பது சவாலான பணியாகும். நில அதிர்வு ஆய்வுமுறைகள், ஆழ்துளைக் கிணறுகளின் பதிவுத் தரவுகள், பூமியின் மேற்பரப்புக்கு அடியில் உள்ள கட்டமைப்பைப் புரிந்து கொள்ளப் பயன்படுத்தப்படுகின்றன. நில அதிர்வு ஆய்வின்போது, ஒலி அதிர்வுகள் தரைவழியாகவே அனுப்பப்படுகின்றன.

அலைகள் பல்வேறு பாறை அடுக்குகளைத் தாக்கும்போது, அவை வெவ்வேறு சிறப்பு இயல்புகளைப் பிரதிபலிக்கின்றன. இவ்வாறு பிரதிபலிக்கும் அலைகள் பதிவு செய்யப்பட்டு, நிலத்தடிப் பாறை அமைப்பு தரவுகளைப் பயன்படுத்தி படம்பிடிக்கப்படுகிறது. எண்ணெய்க் கிணற்றைத் தோண்டும்போது காணப்படும் பூமியின் பல்வேறு அடுக்குகள் தொடர்பான விவரங்கள் ஆழ்துளைக் கிணறுக்கான பதிவுகளில் இடம்பெற்றுள்ளன.

சென்னை ஐஐடி பெருங்கடல் பொறியியல் துறையின் (Ocean Engineering) பெட்ரோலிய பொறியியல் திட்ட ஆசிரியரான பேராசிரியர் ராஜேஷ் ஆர்.நாயர் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
100 ஆண்டுகளுக்கு முன், மேல் அசாமில் டிக்பாய் எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே, அசாம் - அரக்கன் படுகைப் பகுதி கணிசமான அளவுக்கு ஹைட்ரோகார்பன் இருப்பு இருப்பதைக் குறிப்பிடும் விதமாக ‘பிரிவு-1’ல் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஹைட்ரோகார்பன் செறிந்த பாறை அமைப்புகளில் துளையிடக்கூடிய இடங்களில் பெட்ரோலியம் காணப்படுகிறது. அசாமின் எண்ணெய்வளம் மிகுந்த படுகைகளில் பெட்ரோலியம் எங்கு கிடைக்கும் என்பதை அறிய, அங்குள்ள பாறை அமைப்பு பற்றி ஆய்வு செய்வதுடன், அவற்றில் ஹைட்ரோகார்பன் செறிவூட்டக்கூடிய பகுதிகளையும் கண்டறிய வேண்டி உள்ளது.

இது குறித்து ஐஐடி மெட்ராஸ் பெருங்கடல் பொறியியல் துறையின் பெட்ரோலியப் பொறியியல் திட்டப் பேராசிரியரான ராஜேஷ் ஆர்.நாயர் கூறும்போது, 'நிலஅதிர்வுப் படங்களில் தெளிவுத் திறன் குறைவாக இருப்பதால் நிலத்தடி கட்டமைப்புகளைப் படம்பிடிப்பது சவாலாக இருந்து வருகிறது.

ஆழ்துளைக் கிணறுகளின் தரவுகள், நிலஅதிர்வு அளவீடுகள் போன்றவற்றைத் தொடர்புபடுத்தும் பணியும் சிரமம் மிகுந்ததாகும். சிக்கலான ஆழ்துளைக் கிணறுப் பதிவுகள், நில அதிர்வு தரவுகள் போன்றவற்றில் இருந்து ஹைட்ரோகார்பன் மண்டலங்களைக் கணிக்கும் முறையை ஐஐடி மெட்ராஸ் குழுவினர் உருவாக்கி உள்ளனர்.

நில அதிர்வு தரவுகள், ஆழ்துளைக் கிணறுகளின் பதிவுகளில் இருந்து பெறப்பட்ட பெட்ரோபிசிக்கல் தரவுகள் ஆகியவற்றுக்கு இடையே உள்ள புள்ளிவிவரத் தொடர்புகளை நிலைநாட்டும் தரவுப் பகுப்பாய்வு முறைகளை பயன்படுத்தி, எண்ணெய் வளத்தைக் கொண்டுள்ள பாறைகளின் மேற்பரப்பு கட்டமைப்புகளின் குணாதிசயங்களைக் கண்டறிய முடியும்.

மேல் அசாம் படுகையில் ‘டிப்பம்’ மணற்கல் சார்ந்த நீர்த்தேக்கத்தில் ஹைட்ரோகார்பன் செறிவுள்ள பகுதிகளைக் கண்டறிய இக்குழுவினர் தங்களின் செயல்பாட்டு முறையைப் பயன்படுத்தினர். நில அதிர்வு ஆய்வுகள், ஆழ்துளைக் கிணறு பதிவுகள் ஆகியவற்றின் தரவுகளைப் பயன்படுத்தி நிலத்தடி பாறை அமைப்பைப் பெற ஆராய்ச்சியாளர்கள் வெவ்வேறு புள்ளிவிவர அணுகுமுறைகளை ஒன்றிணைத்தனர்.

26 தொகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்திக்கான இந்தியாவின் மிகப்பெரிய கடலோர ஏல நடைமுறைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. புதிய கண்டுபிடிப்புகளுக்கு புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகம் மிகப்பெரிய ஊக்கம் பெறும்.

எண்ணெய் மற்றும் எரிவாயுத் தொழிலைப் பொறுத்தவரை தோராயமான அளவுக்கு உதாரணமாகக் கூற வேண்டுமெனில், புதிய தொழில்நுட்பத்தில் 0.07 சதவீதம் அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும்போது வணிகத்தில் 10 சதவீதம் அளவுக்கு ஊக்கத்தை அதிகரிக்கச் செய்யும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:Happy New Year: புத்தாண்டுக்கு தயாராகும் ஹோட்டல்களின் பலே திட்டங்கள்

ABOUT THE AUTHOR

...view details