தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு பணியாளர்கள், ஆசிரியர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து - முதலமைச்சர் பழனிசாமி

புதிய ஓய்வுதிய திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும், ஊதிய உயர்வு, ஊதிய உயர்வினை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பணியாளர்கள், ஆசிரியர் மீதானா ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

By

Published : Feb 1, 2021, 4:47 PM IST

Updated : Feb 1, 2021, 7:33 PM IST

CM
CM

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி புதிய ஊதியத்திற்குரிய 21 மாதகால நிலுவைத் தொகை வழங்க வேண்டும் , புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் , ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும், பணியாளர் பகுப்பாய்வு குழுவினை அமைத்து வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பல்வேறு சங்கங்கள் அரசுக்கு முன்வைத்து வந்தனர்.

அவற்றுள், சில பணியாளர் சங்கங்கள் ஒன்றிணைந்து அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 22 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்கள் பணியில் பாதிப்பு ஏற்பட்டது . இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், மக்களின் நலனுக்காக பணியாற்றும் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், நிர்வாக கட்டுப்பாட்டை நிலைநிறுத்தவும் அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றாக, 7ஆயிரத்து 898 அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இது தவிர , சாலை மறியல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 ஆயிரத்து 686 ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 408 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் அனைவருமே பிணையில் விடுவிக்கப்பட்டனர். அதுபோல 2ஆயிரத்து 338 நபர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் பணியமர்த்தப்பட்டனர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது , அப்போராட்டத்திற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் விசாரணையின் போது , போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து , நீதிமன்றத்தால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு ஊழியர்களும் , ஆசிரியப் பெருமக்களும் தங்களுடைய போராட்டங்களை உடனடியாக கைவிட்டு , மக்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென 2019 ஆம் ஆண்டு 29ஆம் தேதி அரசு கேட்டுக் கொண்டது. இதனையடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த பணியாளர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் , தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக திரும்ப பெற்றுக் கொள்வதாக 2019 ஜன 30 தேதியன்று அறிவித்து உடனடியாக பணிக்கு திரும்பினர்.

அரசால் எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளையும், வழக்குகளையும் திரும்ப பெற, அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தனர்.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மற்றும் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக சங்க நிர்வாகிகள் இன்று(பிப்.1) மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சரைச் சந்தித்து, மேற்கூறிய தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர். அமைச்சரும் இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக அச்சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்திருந்தார்.

இக்கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து , மறப்போம் , மன்னிப்போம் என்ற உயரிய கருத்தை மனதில் கொண்டு, வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டு, நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு கைவிடுகிறது.

அரசு எடுத்துள்ள இந்த நல்ல முடிவை ஏற்று, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், தொடர்ந்து ஊக்கமுடனும், ஆக்கமுடனும் சிறப்பாக மக்கள் பணி மற்றும் கல்விப்பணியை தொடர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் இரு ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க முதலமைச்சர் கோரிக்கை

Last Updated : Feb 1, 2021, 7:33 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details