தமிழ்நாடு

tamil nadu

எட்டு வழிச்சாலை திட்டம் ரத்து - பழனிசாமிக்கும், ஸ்டாலினுக்கும்  சம்மட்டி அடி! - தினகரன்

சென்னை : எட்டு வழிச்சாலை திட்டம் ரத்து என உயர்நீதிமன்றம் அறிவித்திருப்பது அடிமை சேவகம் புரியும் பழனிசாமி அரசுக்கும், அவர்களை ஆதரித்த ஸ்டாலினுக்கும்  சம்மட்டி அடி என தினகரன் தெரிவித்துள்ளார்.

By

Published : Apr 8, 2019, 10:29 PM IST

Published : Apr 8, 2019, 10:29 PM IST

தினகரன் அறிக்கை

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது எனக் கூறி எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் மற்றும் எட்டு வழி சாலை திட்டத்திற்கு நிலத்தை இழந்த மக்கள் அனைவரும் உயர்நீதிமன்ற அறிவிப்புக்கு தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மோடி அரசும், பழனிச்சாமி அரசும் சேர்ந்து செயல்படுத்த துடித்த சேலம் – சென்னை இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களின் உணர்வுப்பூர்வமான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது.

பா.ஜ.க அரசும், அடிமை சேவகம் புரியும் பழனிசாமி அரசும் சேர்ந்து, அரை ஏக்கர், ஒரு ஏக்கர் வைத்திருக்கும் ஏழை மக்களின் 7,000 ஏக்கர் விவசாய நிலங்கள், ஆயிரக்கணக்கான வீடுகள், தென்னந்தோப்புகள், பள்ளிக்கூடங்கள், கால்நடைப் பண்ணைகள், வனப்பகுதிகளை அழித்து, மலைகளை உடைத்து, இந்த திட்டத்தை நிறைவேற்ற ஒற்றைக்காலில் நின்றனர்.

இப்போது ஊருக்கு ஊர் போய், ‘நான் விவசாயி’ என்று ஓட்டுக்காக முழங்கும் முதலமைச்சர் பழனிச்சாமி, அன்றைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்த பிறகும் அந்தப் பகுதிக்கே போய், ‘8 வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன்’ என்று சபதம் போட்டார். அன்றைக்கு எப்படியாவது பா.ஜ.கவிடம் துண்டு போட்டுவிட வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருந்த, தீயசக்தியின் புதிய அவதாரமும் இதற்கு ஆதரவு அளித்தது.

‘எட்டு வழிச்சாலைத்திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை’ என்று தி.மு.கவின் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையிலேயே பட்டவர்த்தனமாக சொன்னார். சுயநலத்திற்காக எதையும் செய்யத் தயங்காத பழனிசாமிக்கும், அவருக்கு ஆதரவாக நின்ற ஸ்டாலினுக்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு சம்மட்டி அடியாக அமைந்திருக்கிறது. பழனிசாமி அரசு சர்வாதிகாரமாக நடந்து கொண்டு அடித்துப் பிடுங்கிய இடங்களை எந்த தாமதமும் இன்றி நீதிமன்றம் சொல்லி இருப்பதைப் போல பாதிக்கப்பட்டவர்களின் பெயருக்கு உடனடியாக மாற்றிக்கொடுத்திட வேண்டும்.

மக்களின் கண்ணீருக்கு கிடைத்த இத்தீர்ப்பை எதிர்த்து, தேர்தல் முடிந்தவுடன் உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி அரசு மேல்முறையீடு செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதனால் இந்த தேர்தலோடு பா.ஜ.கவைத் தூக்கி சுமந்து வரும் பழனிசாமி அணியினரையும், தமிழக மக்களின் நலனில் அக்கறை கொள்ளாத தி.மு.கவையும் மொத்தமாக வீட்டுக்கு அனுப்பினால்தான், பசுமையை அழித்துவிட்டு பசுமைவழிச்சாலை போடும் திட்டம் முழுமையாக ரத்தாகும்.

அதனைச் செய்து காண்பிப்பதற்கு ஏப்ரல் 18 ஆம் தேதிக்காக தமிழ்நாட்டு மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details