தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 5, 2022, 6:50 AM IST

ETV Bharat / state

ராஜபக்சே குடும்பம் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல வாய்ப்பு - துரை வைகோ

ராஜபக்சே குடும்பத்தினர் எந்நேரத்திலும் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல வாய்ப்பு உள்ளதாக மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

துரை வைகோ
துரை வைகோ

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்தும், ஒன்றிய அரசை கண்டித்தும் மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய விலை உயர்ந்திருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உடனடியாக ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ, “பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. கரோனா காலத்திற்கு பிறகு பொருளாதாரம் மீண்டு வரும் சூழலில், அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்ந்தால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிச்சயம் சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்வார் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது. எதிர்கட்சி என்பதால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்மறை கருத்துக்களை வைக்கலாம். ஆனால், அது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்ற நாள் முதல் பொய்யான, தகுதிக்கு தகாத கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

துபாய் பயணத்தின் போது என்ன செய்தார் என்பதை முதலமைச்சர் வெளிச்சம்போட்டு சொல்லியிருக்கிறார், ஆனால் அதை கொச்சைப்படுத்தும் விதமாக அண்ணாமலை பேசி இருக்கிறார். முதலமைச்சரின் டெல்லி பயணத்தின் போதும் தமிழ்நாட்டின் முக்கியமான 14 கோரிக்கைகளை பிரதமரிடம் வைத்துள்ளோம். தமிழ் நாட்டிற்காகவும் தமிழ்நாட்டு மக்களுக்காகவும் முதலமைச்சர் நாளொரு பொழுதும் உழைத்துக் கொண்டு இருக்கிறார்” என்றார்.

வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல வாய்ப்பு

தொடர்ந்து பேசிய அவர், “ராஜபக்சே அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் தவறான ஆட்சி முறையால் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இலங்கை மக்கள் ஒரு வேளை சாப்பாடு கூட இல்லாமல், கடும் மின் வெட்டால் அவதிப்படுகின்றனர். அதேபோன்றே மக்கள் விரோத ஆட்சியை ஒன்றிய அரசும் கடைபிடித்தால், இலங்கை நிலைதான் விரைவில் இந்தியாவிற்கும் ஏற்படும்.

இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தின் வீடுகளுக்கு முன்பு மக்கள் முற்றுகையிட்டு கொண்டிருக்கின்றனர். உயிருக்கு பயந்து எந்த நேரத்திலும் ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல கூடிய சூழல் இருக்கிறது. பாஜகவினர் ராணுவத்தை தங்கள் பக்கம் வைத்துக் கொள்ளலாம் ஆனால் அவர்கள் மக்கள் விரோத போக்கை கடைபிடித்தால் மக்கள் சினத்திற்கு ஆளானால் எந்த ராணுவத்தாலும் அவர்களை காப்பாற்ற முடியாது.

இலங்கையில் ராஜபக்சே குடும்பத்திற்கு என்ன நிலை ஏற்பட்டதோ அதே நிலைதான் மோடி அரசுக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர்களுக்கும் ஏற்படும். இலங்கை தற்போது சிக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை இந்தியா பயன்படுத்திக்கொண்டு நிதி கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்களிடம் தமிழ் மீனவர்களுக்கு இடைஞ்சல் செய்யக்கூடாது, இலங்கை தமிழ் மக்களுக்கு மாநில சுயாட்சி உள்ளிட்ட உரிமைகளை பெற்று தர இந்திய அரசு வழி வகை செய்ய வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:'திமுக தேர்தல் வாக்குறுதியின்படி, நிபந்தனைகளின்றி கூட்டுறவு வங்கிக் கடனை ரத்து செய்க' - விவசாயிகள் நூதனப் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details