தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் தீவிரமடையும் கொசு ஒழிப்பு பணிகள்.. மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு! - டெங்கு முன்னெச்சரிக்கை

Dengue Prevention: மழைக் காலங்களில் வரக்கூடிய நோய்களை எதிர் கொள்ள போதிய அளவு மருந்துகள், உபகணரங்களுடன் போதுமான மருத்துவ அலுவலர்கள், பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2023, 9:52 PM IST

சென்னை:மதுரவாயல் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுவனின் வீட்டிற்கு நேரில் சென்று சிறுவனின் தாயருக்கு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆறுதல் கூறினார். இதைத் தொடர்ந்து, அவர் அந்த பகுதியில், டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து சுகாதார நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தது, "தற்போது கொசு ஒழிப்பு பணிக்கென 954 நிரந்தர கொசு ஒழிப்பு பணியாளர்களும், 2324 ஒப்பந்த பணியாளர்களும் மொத்தம் 3278 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், 424 மருந்து தெளிப்பான்கள், 120 பவர் ஸ்ப்ரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 300 ஸ்பிரேயர்கள், 324 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 1 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 68 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுக்களை கட்டுப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டெங்குக் காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கையாக பெருநகர சென்னை மாநகராட்சி பல வகைகளில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. சென்னையில் உள்ள சுமார் 17 லட்சம் வீடுகளின் பகுதிகளை சிறுவட்டங்களாக (Sector) பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வட்டத்திற்கும் சுமார் 500 வீடுகள் கொண்ட தெருகளில் வாரந்தோறும் கொசு புழு வளரிடங்களான, மேல்நிலை/கீழ்நிலைத் தொட்டி, கிணறு, தேவையற்ற பொருள்கள் (டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள் மற்றுமுள்ளவைகள்) ஆகியவற்றை கண்டறிந்து கொசு புழுக்கள் இருப்பின் அதனை அழித்திட நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அதிக காய்ச்சல் கண்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு ரத்த தடவல் எடுக்கப்பட்டு உரிய சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட வேண்டும். இந்திய மருத்துவ முறை பாரம்பரிய மருந்துகளான நில வேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு மற்றும் மலைவேம்பு இலைச்சாறு போன்றவை அம்மா உணவகங்களிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பள்ளிகள், மற்றும் மருத்துவ முகாம்களிலும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

சுகாதார ஆய்வாளர்களை கொண்டு பள்ளி இறைவணக்கத்தின் போது பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை மழைக் காலங்களில் வரக்கூடிய நோய்களை எதிர்க் கொள்ள போதிய அளவு மருந்துகள், உபகணரங்களுடன் போதுமான மருத்துவ அலுவலர்கள், பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

எனவே, பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப் புறத்தில் உபயோகமற்ற டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உடைந்த சிமெண்ட் தொட்டிகள் முதலியவற்றில் தண்ணீர் தேங்கி கொசுப் புழு உருவாகும் வாய்ப்புள்ளதால், அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பெருநகர் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்

இதையும் படிங்க:நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் 80 சதவீதம் கல்வித்துறையிலிருந்து வருகிறது - மதுரை உயர்நீதிமன்றம் கருத்து

ABOUT THE AUTHOR

...view details