தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 25, 2022, 10:15 AM IST

ETV Bharat / state

துவரை சாகுபடி -விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ்  நடவடிக்கை

துவரை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனுக்காக, விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் துவரை கொள்முதல் செய்ய ஒன்றியஅரசின் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Cultivation of turmericv in chennai
tn agriCultivation of turmericv in chennai

சென்னை : விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு லாபகரமாக விலை கிடைப்பதற்காக, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அறுவடைக் காலங்களில் விளைபொருட்களின் வரத்து அதிகமிருப்பதால், அப்போது ஏற்படும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.

இத்தருணங்களில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல், உளுந்து, பாசிப்பயறு மற்றும் கொப்பரை போன்ற விளைபொருட்களை ஒன்றிய அரசின் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் அரசே விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து, விவசாயிகளின் நலனை பாதுகாத்து வருகிறது.

குறைந்தபட்ச ஆதரவு விலை

தமிழ்நாட்டில் துவரைப் பயிரானது கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தேனி, ஈரோடு, மதுரை, கரூர், திருச்சி மற்றும் நாமக்கல் போன்ற மாவட்டங்களில் கடந்த ஜுன் மாதத்தில் விதைப்புப் பணி தொடங்கி தற்போது அறுவடை நடைபெற்று வருகின்றது.

துவரைப் பயறுக்கு வெளிச்சந்தை விலையானது, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறையும்பட்சத்தில், விலை வீழ்ச்சியிலிருந்து துவரை விவசாயிகளை பாதுகாத்திட குறைந்தபட்ச ஆதரவு விலையில் துவரை கொள்முதல் செய்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இத்திட்டத்திற்கு தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மாநில இணைப்பு முகமையாகவும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் பிரதான கொள்முதல் நிலையங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. நாஃபெட் நிறுவனம் ஒன்றிய கொள்முதல் முகமையாகவும் செயல்படுகின்றது.

இலக்கு நிர்ணயம்

நடப்புப் பருவத்தில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தேனி, ஈரோடு, மதுரை, கரூர், திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய 13 மாவட்டங்களில் உள்ள 27 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் 10 ஆயிரத்து 992 மெட்ரிக் டன் துவரை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

துவரை பயறுக்கு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.63 வழங்கப்படும். அறுவடைக்குப்பின், துவரையை நன்கு உலரவைத்து, சுத்தம் செய்வது அவசியமாகும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் அருகில் உள்ள கொள்முதல் நிலையங்களை அணுகி, நிலச் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல்களோடு தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.

சேமிப்புக்கிடங்குகளில் இருப்பு வைத்த மூன்று நாட்களுக்குள், விவசாயிகள் வழங்கிய துவரைக்கான தொகை அவர்களது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படும்.

எனவே, துவரை விவசாயிகளின் நலனுக்காக அரசு எடுத்துள்ள இந்த விலை ஆதரவுத் திட்டத்தில் பங்குகொண்டு, தங்களின் துவரைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையினை பெற்று, பயனடையுமாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குடிபோதையில் கமாண்டர் மனைவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது...

ABOUT THE AUTHOR

...view details