சென்னை:மெரினாகடற்கரை அருகில் அமைந்து இருக்கும் மைதானம் என்ற பெருமையை உடையது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம். 1916ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த மைதானம் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் மைதானம் அல்லது சேப்பாக்கம் ஸ்டேடியம் என்று அழைக்கப்பட்டது. அதற்கு பிறகு இந்த மைதானம், பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரின் நினைவாக எம்.ஏ. சிதம்பரம் மைதானம் எனப் பெயர் மாற்றப்பட்டது.
இது இந்தியாவின் மிகப் பழமையான கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒன்றாகும். அதுமட்டுமின்றி, இந்த மைதானத்தில் பல்வேறு உள்ளூர் போட்டிகள், ரஞ்சி ட்ரோபி போட்டிகள், ஐபிஎல் போட்டிகள், சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா அணி வீரர் வீரேந்திர சேவாக் 319 ரன் அடித்தது இந்த மைதானத்தில் தான். இது தான் இந்த மைதானத்தில் அதிக டெஸ்ட் ஸ்கோராகும்.
இந்த மைதானத்தில் உள்ள கேலரிக்கு அரசியல் தலைவர்கள் பெயர் எதுவும் சூட்டப்படாமல் இருந்தது. முதல் முதலாக அண்ணா பெவிலியன் என்று பெயர் சூட்டப்பட்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் நிலையில் அதற்காகவும் ஸ்டேடியம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கும் தற்போது எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம் மறுசீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மறுசீரமைப்பு பணிமட்டுமன்றி புதிய ஸ்டாண்டுகளும் அமைக்கப்பட்டு வருகிறது. அப்படி அண்ணா பெவிலியனில் அமைய இருக்கும் புதிய ஸ்டாண்டுக்கு தமிழ்நாட்டில் 5 முறையாக முதலமைச்சராக இருந்த கருணாநிதியின் பெயர் சூட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. இதற்கான திறப்பு விழா வரும் மார்ச் 17ஆம் தேதி நடைபெற இருக்கிறது.