சென்னை: ஓர் ஆண்டிற்கு மேலாக உழவர்கள், ஒன்றிய அரசு (Union Government) கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களையும் (Farm Laws) எதிர்த்துப் போராடிவந்தனர். இந்த நிலையில் இன்று (நவம்பர் 19) காலை பிரதமர் நரேந்திர மோடி மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பிற்குப் பல்வேறு கட்சித் தலைவர்களும் கருத்துத் தெரிவித்துவருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறும் முடிவு முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், கே. பாலகிருஷ்ணன், சென்னை தி. நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது, "வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஓராண்டுற்கு மேலாக நடைபெற்றது. உழவரின் போராட்டத்திற்கு மோடி அரசு அடிபணிந்துள்ளது, உழவருக்கு கிடைத்த வெற்றி. போராட்டத்தில் உயிரிழந்த உழவருக்கு இந்த வெற்றி சமர்ப்பணம். போராட்டத்தின் வெற்றி கார்ப்பரேட்களுக்கு கிடைத்த மரண அடி.
மோடிக்கு அடுத்து ஆதரித்தது ஈபிஎஸ், ஓபிஎஸ்
திமுக அரசு (DMK Government) வேளாண் சட்டங்களுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. வேளாண் சட்டங்களின் நன்மைகளை விவசாயிகளுக்குப் புரிய வைக்க முடியவில்லை என மோடி கூறியது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போன்றதாகும்.