சேலம்: கரோனா நிவாரண நிதியில் ஊழல் நடந்துள்ளதாக, ஓமலூர் பஞ்சாயத்து ஒன்றிய கவுன்சிலர் சிவஞானவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா தொற்றின் முதலாவது அலை பரவிய நேரத்தில், பஞ்சாயத்து ஒன்றியம் சார்பில், கரோனா நிவாரண நிதியில் இருந்து கிருமிநாசினி, முகக்கவசம் மற்றும் கையுறைகள் அதிக விலைக்கு வாங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கரோனா நிவாரண நிதியில் ஊழல்
லிட்டருக்கு 76 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்பட்ட கிருமினாசினி, 280 ரூபாய்க்கு 5,000 லிட்டர் வாங்கியுள்ளதாகவும்; 130 ரூபாய்க்கு விற்கப்பட்ட முகக்கவசங்களை 220 ரூபாய்க்கும், 13 ரூபாய்க்கு விற்கப்பட்ட கையுறைகளை 180 ரூபாய்க்கும் வாங்கியுள்ளதாக மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
மொத்தமாக, 11 லட்சத்து 55 ஆயிரத்து 200 ரூபாய்க்கு இப்பொருட்களை வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாகவும், இதுகுறித்து மன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பிய போது, தனது ஆட்சேபனைகளை கருத்தில் கொள்ளாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.