தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொரோனா எதிரொலி: ஐபிஎல் போட்டி நடத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பிசிசிஐக்கு உத்தரவு! - ஐபிஎல் போட்டி நடத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பிசிசிஐக்கு உத்தரவு

சென்னை: ஐபிஎல் போட்டிகளின்போது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகளை அறிக்கையாகத் தாக்கல் செய்ய பிசிசிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Corona virus, seeking stay for IPl match, notice to BCCI
Corona virus, seeking stay for IPl match, notice to BCCI

By

Published : Mar 12, 2020, 6:40 PM IST

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழ்நாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே மார்ச் 29ஆம் தேதி தொடங்கவிருக்கும் 13ஆவது ஐபிஎல் தொடருக்குத் தடை விதிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அலெக்ஸ் பென்சைகர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், ”கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி சீனாவின் வூஹான் நகரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை சீன மருத்துவர் லீ வென்லியங் என்பவர் கண்டறிந்தார். தற்போது வரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸைக் கட்டுபடுத்த பொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூட வேண்டாம் என அறிவுறுத்தப்படுள்ளது. இதனால் 150 ஆண்டு கால பழமையான இத்தாலி கால்பந்து லீக் போட்டிகள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று இந்தியாவில் மார்ச் 29ஆம் தேதி தொடங்கி மே 4ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடக்க உள்ளது. இந்தப் போட்டிகளைக் காண மைதானங்களில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மக்கள் கூடுவார்கள் என்பதால், அதற்குத் தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்”எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தரப்பில், இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒரு நாள் போட்டி உள்பட பல கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருவதாகவும், ஐபிஎல் போட்டிகளின்போது மைதானத்திற்கு வரும் ரசிகர்களை தெர்மல் ஸ்கேனரைக் கொண்டு சோதிப்பதா என்பது குறித்தும் ஆலோசித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஐபிஎல் போட்டிகளின்போது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகளை அறிக்கையாகத் தாக்கல் செய்ய பிசிசிஐக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மார்ச் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:கொரோனா வைரஸால் ரத்தாகுகிறதா ஐபிஎல்? - நாளை மறுநாள் ஐபிஎல் நிர்வாகம் ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details