தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பள்ளிகளில் கட்டாயம் பின்பற்ற வேண்டும் - ராதாகிருஷ்ணன் - school reopen

1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அரசின் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பள்ளி நிர்வாகம் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

By

Published : Oct 21, 2021, 2:21 PM IST

சென்னை:சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர் பெண்களுக்கு புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று(அக்.21) தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரோனா உள்ளிட்ட தொற்று நோய்க்கு கவனம் செலுத்தி வரும் நேரத்தில், தூய்மை பணியில் ஈடுபடும் பெண்களுக்கு தொற்றா நோய் குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியாவில் 100 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு புதிய சாதனையை எட்டி உள்ளது. இதில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 5.4 கோடியாக உள்ளது. வரும் நாட்களில் அதிகம் பங்களிப்பு வழங்க வேண்டும்.

53.8 லட்சம் தடுப்பூசி கையிருப்பு

இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த 57 லட்சம் பேர் தகுதி பெற்ற உள்ள நிலையில், அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும். 21 விழுக்காடு நபர்கள் மட்டுமே இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். ஒன்றிய அரசிடம் இருந்து வரும் தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு உடனடியாக பிரித்து அனுப்பப்படுகிறது.

தமிழ்நாட்டில் 53.8 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளது. இரண்டாம் தவணை செலுத்தாதவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

18 வயதிற்கு கீழுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து தேசிய நிபுணர் குழு அனுமதி அளித்த உடன் தமிழ்நாட்டில் உடனடியாக தடுப்பூசி செலுத்தப்படும்.

மூன்றாம் அலை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அரசின் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பள்ளி நிர்வாகம் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

பண்டிகை நாள்களில் மக்கள் பொருள்கள் வாங்க செல்லும் போது கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details