தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள், வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், சாலைப்பணிகள், குளங்கள் பராமரிப்பு பணிகள் குறித்தும், நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் சீர்மிகு நகரத் திட்டம், அம்ரூத் திட்டம் குறித்து பேரூராட்சிகள் இயக்ககத்தின் சார்பில் குடிநீர் திட்டப்பணிகள், சாலை பணிகள், தெருவிளக்குகள், அனைவருக்கும் வீடுகள் போன்ற பணிகளின் நிலை குறித்தும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பசுமை வீடு திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் போன்ற வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் நாள்தோறும் வழங்கப்பட்டு வரும் குடிநீர் குறித்தும், அடைப்புகள் உள்ள குழாய்களை புதுப்பிக்கும் நடவடிக்கை குறித்தும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் குறித்தும், நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள், குடிநீர் விநியோகம், திட்டப்பணிகள் குறித்தும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் சுயஉதவிக் குழுக்களுக்கு சிறப்பு கடனுதவி வழங்கும் நிலை, புத்தாக்கப் பயிற்சி புத்தகப் பராமரிப்பு குறித்தும், அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் மூலம் 2019-20 முடிய உள்ள நிலுவை இலக்கு, 2020-21 ஆண்டு இலக்கை அடைய எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களிடம் அமைச்சர் விரிவாக கேட்டறிந்து பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டார்.
மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் 2019-20ஆம் ஆண்டில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளங்கள், குட்டைகள் மேம்படுத்தும் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி பணிகளை இம்மாத இறுதிக்குள் விரைந்து முடித்து பணியினை துரிதமாக செயல்படுத்தவும் உத்தரவிட்டார்.