சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குப் பெரும் அளவில் கடத்தல் பொருள்கள் கொண்டுவரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த திருச்சியைச் சேர்ந்த முகமது அசாருதீன் (23), ஜான் முகமது (29), ஜெய்லாதீன் (40), சென்னையைச் சேர்ந்த முகமது (60), மலேசியாவிலிருந்து வந்த சிவகங்கையைச் சேர்ந்த அஸ்லாம் பிகாஸ் (23) ஆகிய ஐந்து பேரை சந்தேகத்தின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தபோது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ. 1 கோடியே 29 லட்சம் மதிப்புள்ள சுமார் 3 கிலோ தங்கத்தை கைப்பற்றினார்கள்.
அதேபோல், துபாயிலிருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த சிக்கந்தர் (26), ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது அஸ்மத்துல்லா கான் (32), ஒபைஸ் முகமது (20) ஆகிய மூன்று பேரை சோதனையிட்ட சுங்க இலாகா அதிகாரிகள், அவர்களிடமிருந்து ரூ. 83 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள சுமார், 1 கிலோ 960 கிராம் தங்கத்தைக் கைப்பற்றினார்கள்.