தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 3, 2021, 8:45 PM IST

ETV Bharat / state

தேர்தல் அலுவலர்களின் தொடர்பு விவரங்கள்: ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு

சென்னை: சட்டப்பேரவைத் தொகுதிகளின் தேர்தல் அலுவலர்களின் தொடர்பு விவரங்கள் குறிப்பிடப்படவில்லை என்று  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கை தேர்தல் ஆணையத்தின் உத்தரவாதத்தை ஏற்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அந்த மனுவில், தேர்தல் ஆணைய அறிவிப்பில் தேர்தல் அலுவலர்கள், உதவித் தேர்தல் அலுவலர்களின் முகவரி, கைப்பேசி எண், வாட்ஸ்அப் எண், மின்னஞ்சல் முகவரி என்பன போன்ற தொடர்பு விவரங்கள் குறிப்பிடப்படவில்லை என்றும், இது சம்பந்தமாக தமிழ்நாடு தலைமைச் தேர்தல் அலுவலருக்கு மனு அனுப்பியதாகவும், விவரங்களை உள்ளடக்கிய புதிய பட்டியலை வெளியிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (மார்ச் 3) விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதற்காக, மாவட்டத் தேர்தல் அலுவலர், தொகுதித் தேர்தல் அலுவலர், உதவித் தேர்தல் அலுவலர்களை நியமித்து கடந்த ஜனவரி 21ஆம் தேதி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

சென்னை உயர் நீதிமன்றம்

பொதுத் துறை இணையதளத்தில், 230 தொகுதிகளின் தேர்தல் அலுவலர்கள், உதவித் தேர்தல் அலுவலர்கள் ஆகியோரின் தொடர்பு எண்கள், இ-மெயில் முகவரிகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ள நான்கு தொகுதிகளில் மூன்று தொகுதிகளுக்கான அலுவலர்களின் விவரங்கள் இன்று வெளியிடப்படும் எனவும், உத்திரமேரூர் தொகுதிக்கான விவரங்கள் ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்படும் எனவும் உறுதியளித்தார்.

இதனையடுத்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவாதத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், தேர்தல் அலுவலர்களின் விவரங்களை வெளியிடக்கோரி ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details