சென்னை:முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இதையடுத்து கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்து, பின் அவரை கட்சியிலிருந்து நீக்கினர்.
மேலும் உள்கட்சி தேர்தலும் நடத்தப்படவில்லை. அதற்கு மாறாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டு, இரட்டை தலைமை அடிப்படையில் கட்சி நடத்தப்பட்டுவருகிறது.
எனவே, இதற்கு தடை விதித்து, உள்கட்சி தேர்தலை நடத்தி பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரத்தில் ஒருவரை தேர்தெடுக்க வேண்டும் எனவும், இந்த நடைமுறையை அதிமுக பின்பற்றவில்லை என்றால் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் புகார் அளித்திருந்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் அதிமுகவில் உள்கட்சி தேர்தல் நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி வழக்கு தொடர்ந்திருந்தார்.