இது குறித்து அவர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், "தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு பெற்றோர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு தற்காலிகமாகப் பள்ளிகள் திறப்பது தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது 10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி நலன் கருதி பொதுத்தேர்வை எதிர்கொள்ள ஏதுவாக மாணவர்களைத் தயார்செய்ய வேண்டும் என்பதால், பள்ளி திறந்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடங்கள் கற்பிப்பது இன்றியமையாததாகும்.
எனவே, ஜனவரி எட்டாம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து பொங்கல் விடுமுறை முடிந்த பின்னர் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள், நிலையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பள்ளிகள் திறப்பது குறித்து கூட்டம் அனைத்துப் பள்ளிகள் வசதிக்கேற்ப நடத்தப்பட வேண்டும்.