சென்னை:அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (மார்ச் 26) நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் அகில இந்திய அமைப்பு தேர்தல் பொறுப்பாளர் கௌரவ் கோகாய், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஸ்ரீ வல்ல பிரசாத், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. வி. தங்கபாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ் அழகிரி, "டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கை மார்ச் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற காரணத்தால் உறுப்பினர் சேர்க்கை பணியை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பின்பு இப்போது மீண்டும் அந்த பணிகளை தொடங்கியுள்ளோம். கடந்த ஒரு வாரமாக உறுப்பினர் சேர்க்கை பணி வேகமாக நடைபெற்று வருகிறது. அது குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
சமூக வலைதளங்களில் அக்கப்போர் செய்யும் அண்ணாமலை
சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சி ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. விமர்சனம் என்பது வேறு அக்கப்போர் என்பது வேறு. பாஜக தலைவர் அண்ணாமலை சமூக வலைதளங்களில் அக்கப்போர் செய்து கொண்டு இருக்கிறார்.
மத்தியில் ஆளக்கூடிய, அக்கட்சியின் மாநில தலைவர், முதலமைச்சரைப் பற்றி தவறான கருத்தைத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் 5 ஆயிரம் கோடி எடுத்துக் கொண்டு துபாய் சென்றுள்ளார் என்று சொல்லியிருக்கிறார்.