கோவிட்-19 பாதிப்பு: தமிழ்நாட்டில் 8 ஆயிரத்தைத் தாண்டியது! - covid-19 latest news in tamil nadu
சென்னை: இன்று புதிதாக 798 பேர் தமிழ்நாட்டில் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 2ஆக உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
chennai corona
By
Published : May 11, 2020, 8:39 PM IST
|
Updated : May 11, 2020, 9:29 PM IST
இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 53 ஆய்வகங்களில் 11 ஆயிரத்து 862 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், இன்று மட்டும் 798 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டாயிரத்து இரண்டாக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 514 ஆண்களும், 284 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2 லட்சத்து 54 ஆயிரத்து 899 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த 92 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 2 ஆயிரத்து 59 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 895 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் கோவிட்-19ஆல் ஆறு பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 36 வயது பெண்மணி, 50 வயது ஆண், 67 வயது பெண்மணி, 32 வயது பெண் ஆகியோரும், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 66 வயது பெண்மணி, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது பெண்மணி ஆகியோர் இப்பெருந் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கோவிட்-19 பாதிப்பு இன்று அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 538 பேருக்கும், திருவள்ளூரில் 97 பேருக்கும், செங்கல்பட்டில் 90 பேருக்கும், அரியலூரில் 33 பேருக்கும், திருவண்ணாமலையில் 10 பேருக்கும் என 798 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.