தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 13, 2020, 3:33 AM IST

ETV Bharat / state

இழப்பீட்டுத் தொகை ரூ.10774.98 கோடியினை விரைந்து வழங்கிட வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்

42ஆவது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றக் கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையான ரூ.10774.98 கோடியினை விரைந்து வழங்கிட வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

jayakumar Minister
jayakumar Minister

டெல்லியில் நேற்று (12-10-2020) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற 42ஆவது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டத்தின் தொடர்ச்சியான அமர்வில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தில் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கிருஷ்ணன், முதன்மைச் செயலர் வணிகவரி ஆணையர் சித்திக், மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் பீலா ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் காணொலி மூலம் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:

"மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்குவது குறித்தான தாங்கள் எடுத்துவரும் முயற்சிக்கு என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். ஆகஸ்ட் 27ஆம் தேதி அன்று நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் மன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு இணங்க மத்திய நிதியமைச்சகம் ஒரு விளக்கக் குறிப்பு ஒன்றினை மாநிலங்களுடன் பகிர்ந்துகொண்டது. அதில், இழப்பீடு தொடர்பாக ஏற்படக்கூடிய பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வது தொடர்பான முறையினை சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றம் முடிவு செய்யவேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

கோவிட்-19 பெருந்தொற்று நிலவி வரும் இந்த தருணத்தில், ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு கவனம் கொண்டுள்ளது. இந்த நோக்கத்தின் அடிப்படையில் தான் இதற்கு முன் நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் 1-ஆம் விருப்பத் தேர்வினை ஏற்க வேண்டியிருந்தது.

இந்த விவகாரத்திற்கு விரைந்து தீர்வு கண்டு, மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியினை வழங்கினால், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான காலகட்டத்தில் பொருளாதாரத்தை உடனடியாக புதுப்பிக்க இயலும். சென்ற வாரம் ரூ.1483.96 கோடி இழப்பீட்டு தொகையாக தமிழ்நாட்டிற்கு வழங்கியமைக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். ஜூலை, 2020 முடிய தமிழ்நாட்டிற்கு வரப்பெறவேண்டிய இழப்பீட்டுத் தொகையான ரூ.10774.98 கோடியினை விரைந்து வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

2017-2018ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தீர்வு நிலுவைத் தொகையான ரூ.4321 கோடியை தமிழ்நாட்டிற்கு விரைவில் வழங்கிட உறுதியளித்துள்ள மன்றத் தலைவர் அவர்களுக்கு இத்தருணத்தில் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்"

இவ்வாறு அவர் பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details