தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 6, 2021, 2:21 PM IST

ETV Bharat / state

நாளை மறுநாள் மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பூசி ஒத்திகை

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நாளை மறுநாள் (ஜன.8) நடைபெறும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தடுப்பூசி ஒத்திகை
தடுப்பூசி ஒத்திகை

கரோனா வைரஸ் தடுப்பு ஊசிகள் தமிழ்நாட்டிற்கு வரும்போது அவற்றை சேமிக்க ஏற்பாடு செய்துள்ள வசதிகள் குறித்து சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பெரியமேட்டில் உள்ள மத்திய மருந்து பகுப்பாய்வு ஆய்வகத்தில் இருக்கும் குளிர்சாதன வசதியை ஆய்வு செய்தார்.

மத்திய மருந்து பகுப்பாய்வு ஆய்வகத்திலிருந்து தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரி லட்சத்தீவு ஆகிய மாநிலங்களுக்கு மருந்துகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தடுப்பூசி கிடங்கில் உள்ள வசதிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ’தடுப்பூசி வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எந்தவித சுணக்கமுமின்றி செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகின்றன

தடுப்பூசி போடுவதற்கு ஏற்கனவே ஐந்து மாவட்டங்களில் 17 இடங்களில் ஒத்திகை செய்யப்பட்டது. அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வரும் எட்டாம் தேதி தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படவுள்ளது. அப்போது ஒருவருக்கு தடுப்பூசி போடுவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் அனைத்தும் செய்து பார்க்கப்படும்.

தமிழ்நாட்டில் 51 குளிர்சாதன அறைகள் மாவட்டங்களில் தயார் நிலையில் உள்ளன. தமிழ்நாட்டிற்கு தடுப்பூசி எப்போது வரும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். அதற்காக தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு வழங்கிய 33 லட்சம் மருந்தில்லா ஊசிகள் முதற்கட்டமாக வழங்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கையிருப்பில் 17 லட்சம் ஊசிகள் கூடுதலாக உள்ளன. இதனை மாவட்டங்களுக்கு பிரித்து வழங்க உள்ளோம்.

தடுப்பூசிகள் வந்த மறுநாள் முதல் செலுத்துவதற்கு தயார் நிலையில் உள்ளோம். தமிழ்நாட்டில் 2850 இடங்களில் நாளொன்றுக்கு 100 நபர்களுக்கு வீதம் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அவர்களுக்கும் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன.

18 வயதிற்கு மேல் உள்ளவர்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை வழங்கி தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து தெரிவிக்கப்படும். தடுப்பூசி பாதுகாப்பானது என மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறையினர் தெரிவித்துள்ளனர்”என்றார்.

இதையும் படிங்க:வரும் ஜூலைக்குள் 30 கோடி பேருக்கு தடுப்பூசி: பட்டியல் விரைவில் தயார்

ABOUT THE AUTHOR

...view details