சென்னை:வெளிநாட்டை போன்று சென்னை மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர் ஒருவர் உயர் கல்விக்காக உதவி கேட்டு ஜிபே நம்பரை ஒரு அட்டையில் எழுதி வைத்து, வயலின் வாசித்து வந்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. அங்கு வந்த பலரும் பணமாகவும், ஜிபே மூலமாகவும் அவருக்கு உதவி செய்தனர். இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்போது சம்பவ இடத்திற்குச் சென்ற திருவல்லிக்கேணி உதவி காவல் ஆணையர் பாஸ்கர், கல்லூரி மாணவரிடம் விசாரித்துள்ளார். அப்போது, காரப்பாக்கம் கேசிஜி பொறியியல் கல்லூரியில் பிஇ இரண்டாம் ஆண்டு ஏரோஸ்பேஸ் படித்து வரும் கல்லூரி மாணவர் அஜித் என்பது தெரியவந்தது. வேலூரில் அரசு பள்ளியில் படித்த மாணவர் அஜித், மெக்கானிக்கல் படிப்பில் டிப்ளமோ முடித்துவிட்டு கவுன்சிலிங் மூலமாக நேரடியாக பிஇ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
வேலூரில் தனது பெற்றோர் கயிறு தரிக்கும் வேலை செய்து வருவதாகவும், தன் படிப்பிற்கான செலவை பெற்றோரிடம் கேட்காமல் தானே சமாளித்துக் கொள்ள நினைத்ததாகவும் கூறியுள்ளார். பைலட்டாக வேண்டும் என்ற மிகப்பெரிய கனவுடன் இருக்கும் கல்லூரி மாணவன் அஜித், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான கல்லூரி கட்டணம் கட்டுவதற்காக வெளிநாட்டில் உள்ளது போன்று நூதன முறையில் சென்னை மெரினா கடற்கரையில் வயலின் வாசித்துக் கொண்டு உதவி கேட்டது தெரிய வந்துள்ளது.
பொறியியல் படிப்பு மட்டுமல்லாது பைலட்டாக வேண்டும் என்றால் மேற்படிப்பிற்கும் அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் கனவை மட்டும் வைத்துக் கொண்டு கல்வி கட்டணத்திற்காக நூதன முறையில் உதவியை நாடியுள்ளார். ஏழை மாணவனாகிய அஜித் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து பைலட் ஆவதற்கு படிப்பை படிக்க முடியுமா என்ற கேள்வி இருந்தாலும், விடாமுயற்சியில் பைலட் ஆவதற்காக பல்வேறு நபர்களிடம் நூதன முறையில் கல்விக்கான உதவியை கேட்டு லட்சியத்தை அடைய போராடி வருவதாக தெரிவித்துள்ளார்.