தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 1, 2021, 6:36 PM IST

ETV Bharat / state

100 நாள் வேலை திட்ட நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வழங்கவேண்டிய தொகையை உடனடியாக விடுவிக்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர்
முதலமைச்சர்

சென்னை: அக்கடிதத்தில் , "கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வேலைவாய்ப்பில் அதிகபட்சம் நூறு நாட்கள் உடலுழைப்பை வழங்கும் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

2021-2022 ஆம் நிதியாண்டில் ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்ட ரூ.3524.69 கோடியில் மொத்தத் தொகையும் 15.09.2021 வரை தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைத்து முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு இத்திட்டத்திற்கு நிதி ஏதும் விடுவிக்காத காரணத்தால் 1.11.2021 வரை 1178.12 கோடி ரூபாய் அளவிற்கு ஊதியம் வழங்கப்படாமல், நிலுவையில் உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கிராமப்புறங்களில் நிலையான வாழ்வாதார வாய்ப்பாகக் கருதப்படுகிறது என்றும் தற்போது ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், பல ஆயிரக்கணக்கான கிராமப்புற குடும்பங்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

கிராமப்புற மக்கள் வேலை வாய்ப்புக்காக நகர்ப்புறத்தை நோக்கி இடம்பெயர வழிவகுக்கும் என்பதைச் சுட்டிக்காட்டியும், பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டும் அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை வழங்க ஏதுவாக உடனடியாக நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 600 நாள்களுக்குப் பின் பள்ளிகள் திறப்பு: பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்ற அமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details