சென்னை:முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 30) காணொலி காட்சி வாயிலாக கேரள மாநிலம், திருச்சூரில் மலையாள மனோரமா நியூஸ் சார்பில் நடைபெற்ற ‘இந்தியா - 75’ என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்று ஊடகவியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
கேள்வி: கேரள மக்கள் தமிழ் சினிமாவுக்கும் அதன் இசைக்கும் மிகப் பெரும் ரசிகர்கள். அதே போல ரசிகர் கூட்டம் தமிழ்நாட்டு முதலமைச்சருக்கும் அங்கு இருக்கிறது. கண்ணூரில் நடந்த சிபிஎம் கட்சி மாநாட்டில் உங்களுக்கு கிடைத்த வரவேற்பில் இருந்து அது தெளிவாகத் தெரிகிறது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தமிழ்நாடு எப்படி பார்க்கிறது ?.
பதில்: “எனக்கு கேரளாவில் ரசிகர்கள் இருப்பது போல ‘காம்ரேட்’ பினராயி விஜயனுக்கும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர், முதலமைச்சராக செயல்பட்டு கொண்டிருந்த நேரத்தில், தமிழ்நாட்டில் வேறு ஒரு கட்சியின் ஆட்சி இருந்தது. அது உங்களுக்கு தெரியும்.
அப்போது கேரள மாநிலத்தின் பினராயி விஜயன் போல ஒரு முதலமைச்சர் நமது மாநிலத்திற்கு இல்லையே என்று தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் ஒரு ஏக்கத்தோடு சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அதை ஊடகங்களும் கூட எழுதியது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்தபோது, என்னுடைய செயல்பாடுகளுக்கு, முன்னுதரானமாக உங்களுடைய முதலமைச்சர் பினராயி விஜயனுடைய செயல்பாடுகளையே நான் கையில் எடுத்தேன். குறிப்பாக, கரோனா தொற்று நோயை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதை உங்கள் மாநிலத்தின் உடைய முதலமைச்சரின் வழிகாட்டுதல்படியே அந்தப் பணியை நிறைவேற்றினேன். இதுதான் எனக்கு பெருமையே” என்றார்.
கேள்வி:தமிழ்நாட்டில் சிபிஎம் கட்சியும் மற்றும் திமுகவும் கூட்டணி கட்சிகள். இந்த நட்பு ஆட்சியிலும் கட்சியிலும் எப்படி இருக்கிறது?
முதலமைச்சர் பதில்: “எங்களுடைய இரு கட்சிகளுக்கும் இடையில் இருப்பது வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல. அது ஒரு கொள்கை கூட்டணி, லட்சியக் கூட்டணி. எனவே நாங்கள் இணக்கமாவே இருக்கிறோம். திமுக ஆட்சிக்குத் தேவையான, ஆரோக்கியமான ஆலோசனைகளை அக்கட்சியினுடைய தலைவர்கள் எங்களுக்கு அவ்வப்போது அறிக்கைகளாக கொடுக்கிறார்கள்.