சென்னை: எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் அவசரகால செயல்பாட்டு மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். பல்வேறு அரசு அதிகாரிகளிடம் காணொளி காட்சி வாயிலாக மாண்டஸ் புயல் தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து கேட்டறிந்தார்.
பின்பு மாவட்ட நிர்வாகங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைக்க உத்தரவிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், ”எந்த மழையானாலும், காற்றானாலும் சமாளிக்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. தமிழக மக்களை காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.மாண்டஸ் புயல் தொடர்பாக தமிழக மக்கள் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.