சென்னை: சட்டப்பேரவையில் ஸ்டாலின், மதுரையில் பன்னாட்டுத் தரத்திலான கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, மதுரை புதுநத்தம் சாலையில், அதற்கான இடம் தேர்வுசெய்யப்பட்டு, ஸ்டாலின் நேரடியாகச் சென்று ஆய்வுமேற்கொண்டார்.
இதனையடுத்து, மதுரை புதுநத்தம் சாலையில், இடம் தேர்வுசெய்யப்பட்டு அங்கு நூலகம் கட்டுமான பணிகளுக்கு ரூ.99 கோடியும், தொழில்நுட்பச் சாதனங்கள், நூல்கள் வாங்க ரூ.15 கோடியும் நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்டாலின் மதுரை புது நத்தம் பகுதியில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்திற்கான அடிக்கல் நாட்டும் பணியைக் காணொலி காட்சி வாயிலாகத் திறந்துவைத்தார்.
மதுரையில் பன்னாட்டுத் தரத்திலான கலைஞர் நினைவு நூலகம்
இந்த நூலகம் ஏழு மாடிகளுடன் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ளது. கீழ்த்தளத்தில் 250 வாகனங்கள் நிறுத்தும் வகையிலும், நூலக வளாகத்தில் 300 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் வசதியுடனும் அமைக்கப்படுகிறது.
மதுரையில் பன்னாட்டுத் தரத்திலான கலைஞர் நினைவு நூலகம்
நூலகத்தின் முகப்புப் பகுதியில் கருணாநிதியின் வெண்கலச் சிலை வைக்கவும் நூலகத்தின் தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு அமைக்கப்படுவதுடன், கண்காணிப்பு கேமரா வசதி, ஒளி-ஒலி அமைப்புகளுடன் சிறிய அளவிலான அறைகள், குழந்தைகளுக்கான பிரிவுகள் அமைக்கப்பட உள்ளன.
கட்டடத்தில் 250 மற்றும் 200 பேர் அமரும் வகையில் இரண்டு கூட்ட அறைகள் அமைக்கப்படுகின்றன. நூலகத்தில் தமிழ்ப் பிரிவு, ஆங்கிலப்பிரிவு, கலைஞர் பிரிவு, குடிமைப்பணிகள் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான பிரிவு உள்ளிட்ட 27 பிரிவுகளுக்குத் தனித்தனி அறைகள் கட்டப்படுகின்றன.
மதுரையில் பன்னாட்டுத் தரத்திலான கலைஞர் நினைவு நூலகம்
தமிழ், ஆங்கிலம், ஆன்மிகம் குறிப்பாக சைவம், வைணவம், சங்க இலக்கியம், மொழியியல், வாழ்க்கை சமூகம், அறிவியல், ஆய்வு மாணவர்களுக்கான நூல்கள், மொழிபெயர்ப்பு, விருது பெற்றவர்களுக்கான நூல்கள், குடிமைப்பணிகளுக்கான நூல்கள், மாணவர்கள் போட்டித் தேர்வுக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளத் தேவையான புத்தகங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் படிக்கத் தேவையான புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்கள், வேலைவாய்ப்புக்கான நூல்கள் உள்பட 2.5 லட்சம் நூல்கள் வைக்கப்படுகின்றன.
மதுரையில் பன்னாட்டுத் தரத்திலான கலைஞர் நினைவு நூலகம்
குழந்தைகளுக்கான படிப்பு அறைகள், நூல்கள், ஒளி-ஒலி காட்சிக் கூடம், டிஜிட்டல் அறைகள் போன்றவை பன்னாட்டுத் தரத்தில் அமைகிறது. இந்தக் கட்டடம் 12 மாதங்களில் கட்டி முடிக்கப்பட உள்ளது. 2.6 ஏக்கர் நிலப்பரப்பில் 2 ஏக்கரில் கட்டடம் கட்டப்படுகிறது.
இந்த நூலகமானது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சியின்போது கட்டப்பட்ட, அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட தலைமைச் செயலகம் (தற்போது பன்நோக்கு மருத்துவமனை) போன்ற அமைப்பில், நவீன வசதிகளுடன் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நிதித் துறை, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் கே.என். நேரு, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, தலைமைச் செயலர் இறையன்பு உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : 50 லட்சம் தொண்டர்கள்.. டிஜிட்டல் பேரணிக்கு தயாராகும் பாஜக!