தமிழ்நாடு

tamil nadu

திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள்: ஸ்டாலின் தொடங்கிவைப்பு

By

Published : Dec 31, 2021, 5:12 PM IST

இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை சார்பில் தமிழ்நாட்டிலுள்ள திருக்கோயில்களில் முதற்கட்டமாக பக்தர்கள் மிகுதியாக வருகைதரும் திருச்செந்தூர், திருவண்ணாமலை, மேல்மலையனூர், சோளிங்கர், மருதமலை, திருத்தணி, பழனி ஆகிய இடங்களிலுள்ள கோயில்களில் மருத்துவ மையங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள், cm  Stalin inaugurates medical centers in seven temples in Tamil Nadu
cm Stalin inaugurates medical centers in seven temples in Tamil Nadu

சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ மையம் ஆகிய ஏழு திருக்கோயில்களில் மருத்துவ மையங்களைக் காணொலிக் காட்சி வாயிலாக ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் அதிகளவில் பக்தர்கள் வருகைபுரியும் 10 திருக்கோயில்கள் தேர்வுசெய்யப்பட்டு அத்திருக்கோயில்களில், தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனுக்குடன் உயிர் காக்கும் மருத்துவ முதலுதவி அளித்திடும் வகையில் இரண்டு மருத்துவர்கள், இரண்டு செவிலியர், இரண்டு பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களைக் கொண்டு மருத்துவ மையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 2021-22ஆம் ஆண்டு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில், பக்தர்கள் அதிகளவில் வருகைபுரியும் 10 திருக்கோயில்களில் தேவையான மருத்துவர், மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள்

அதன்படி, திருக்கோயில் மருத்துவ மையங்களில் பணியாற்றிடத் தகுதியான மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் தேர்வுசெய்யப்பட்டு திருக்கோயில்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

முதற்கட்டமாக, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், சோளிங்கர்- அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்கள், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ மையம் ஆகியவற்றை ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள்

இந்த மருத்துவ மையங்களில் முதலுதவி, அடிப்படை சிகிச்சை மேற்கொள்வதற்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரத்த அழுத்தமானி, படுக்கைகள், உயிர்காக்கும் மருந்துகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. இதனால் திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில் பேருதவியாகச் செயல்படும்.

இப்பணிக்காக ஒரு மருத்துவ மையத்திற்கு ஓராண்டிற்கு சுமார் ரூ.30 லட்சம் வீதம் 10 திருக்கோயில் மருத்துவ மையங்களுக்கு மொத்தம் மூன்று கோடி ரூபாய் திருக்கோயில் நிதியிலிருந்து செலவு செய்யப்படும்.

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகள், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலா & பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் பி. சந்திர மோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், காணொலிக் காட்சி வாயிலாக மீன்வளம் - மீனவர் நலத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், திருவள்ளூர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: மக்கள் கடல்... மாநாட்டு மன்னர்; நீங்களே மீறலாமா மிஸ்டர் CM! - ஓபிஎஸ்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details