சென்னை:தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், ஓசூரில் உள்ள மாவட்ட கால்நடைப் பண்ணையில் ஆறு கோடியே 74 லட்சத்து 87 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகக் கட்டடம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில், முட்டுக்காட்டில் எட்டு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன்வளர்ப்பு தொழில்நுட்ப தொழில்சார் கல்வி நிலையக் கட்டடம், ஜீயபுரத்தில் மூன்று கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையக் கட்டடம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், 'ஓசூரில் உள்ள மாவட்ட கால்நடைப் பண்ணை வளாகத்தில், ஐந்தாயிரத்து 100 வளரும் கோழிகள், ஒன்பதாயிரத்து 150 முட்டையிடும் கோழிகளைப் பராமரிக்கும் வகையிலும், ஒவ்வொரு வாரமும் சுமார் 20 ஆயிரம் எண்ணிக்கையில் ஒருநாள் வயதுடைய நாட்டுக்கோழிக் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு, ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் கோழிக்குஞ்சுகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதால் நாட்டுக்கோழிக்குஞ்சுகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
முட்டுக்காட்டில் மீன்வளர்ப்புத் தொழில்நுட்ப தொழில்சார் கல்வி நிலையக் கட்டடம், தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 30,010 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
இக்கட்டடத்தில் வகுப்பறைகள், கருத்தரங்கு அறை, ஆசிரியர், பணியாளர் அறை, நூலகம், அருங்காட்சியகம், அலங்கார மீன் வளர்ப்பகம், மீன் உணவு தர பகுப்பாய்வு ஆய்வகம், நீர் தர பகுப்பாய்வு ஆய்வகம், நுண்ணுயிரியல் ஆய்வகம், மீன் நோய் கண்டறிதல் ஆய்வகம், இளநிலை, முதுநிலை மாணவர்கள் ஆய்வகம், தேர்வு அறை, கணினி அறை ஆகியவை அமைக்கப்பெற்றுள்ளன.