தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2023, 2:05 PM IST

ETV Bharat / state

'தொண்டை வலி இருந்தாலும், தொண்டில் தொய்வு ஏற்படக் கூடாது என வந்துவிட்டேன்' - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

Magalir Urimai Thogai: “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொன்னால், சொன்னதை நிச்சயம் செய்வேன். அதற்கு அடையாளமாகத்தான், மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வழங்குகிறோம்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

'தொண்டை வலி இருந்தாலும், தொண்டில் தொய்வு ஏற்படக் கூடாது என வந்துவிட்டேன்
'தொண்டை வலி இருந்தாலும், தொண்டில் தொய்வு ஏற்படக் கூடாது என வந்துவிட்டேன்

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேச்சு

சென்னை:சென்னை கலைவாணர் அரங்கத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பயனாளிகளான 7.35 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கிடும் விதமாக, மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.10) வழங்கினார்.

அப்போது மேடையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “கடந்த சில நாட்களாக காய்ச்சலும், தொண்டை வலியும் எனக்கு இருந்தது. இப்போது காய்ச்சல் குறைந்துவிட்டாலும், தொண்டை வலி மட்டும் இருக்கிறது. என்னுடைய குரலை கேட்கும்போதே உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான், சில நாட்களாக வீட்டிலேயே முழு ஓய்வு எடுத்துக் கொண்டேன்.

இந்த வாரம் முழுக்க ஓய்வெடுக்க வேண்டும் என்று என்னுடைய மருத்துவர்கள் சொன்னாலும், என்னால் மக்களைச் சந்திக்காமல் இருக்க முடியவில்லை. அதனால்தான், உங்களை எல்லாம் நான் பார்க்க வந்துவிட்டேன். தொண்டை வலி இருந்தாலும், தொண்டில் தொய்வு ஏற்படக் கூடாது, அதனால்தான் வந்துவிட்டேன். உங்களை பார்க்கும்போது என்னுடைய உடல் வலி எல்லாம் குறைந்து, மனது மகிழ்ச்சியில் நிறைந்து விட்டது.

இந்த ஆயிரம் ரூபாயை வாங்கும்போது உங்களுக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியைவிட, கொடுக்கும்போது எனக்குதான் அதிகமான மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த மகிழ்ச்சியைவிட சிறந்த மருந்து எதுவாக இருக்க முடியும்? அதனால்தான், மருத்துவர்கள் அறிவுரையையும் மீறி இந்த விழாவுக்கு வந்துவிட்டேன்.

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தேர்தலுக்கு முன்பாகவே சொன்னோம். அப்போது சிலர் என்ன சொன்னார்கள் என்றால், ‘இதையெல்லாம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதி’, ‘இவர்கள் ஆட்சிக்கு
வரவே மாட்டார்கள்’ என்றார்கள்.

ஆனால், நீங்கள் எல்லோரும் ‘தி.மு.கதான் ஆட்சிக்கு வரவேண்டும், தி.மு.க சொன்னால் சொன்னதை நிறைவேற்றும் கருணாநிதி மகன் ஸ்டாலின்தான் முதலமைச்சராக வர வேண்டும்’ என்று ஓட்டு போட்டு பதிலடி தந்தீர்கள். உங்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டவன் நான்.

இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொன்னால், சொன்னதை நிச்சயம் செய்வேன். அதற்கு அடையாளமாகதான், மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வழங்குகிறோம். அதனால்தான் உங்கள் முன்னால் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன். கடந்த செப்டம்பர் 15ஆம் நாள் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தேன்.

செப்டம்பர் 15, அக்டோபர் 15 என இரண்டு மாதங்களுக்கான 2,000 ரூபாயை, ஒரு கோடியே 6 லட்சம் சகோதரிகள் வாங்கி விட்டார்கள். இந்த முறை முன்கூட்டியே இன்றைக்கு மாலைக்குள் அடுத்த ஆயிரம் ரூபாயும் உங்களுக்கு வந்து சேர்ந்துவிடும். இந்த தொகை உதவித்தொகை இல்லை, உரிமைத் தொகை.

இந்த உரிமைத் தொகை உண்மையிலேயே தேவையும், தகுதியும் உள்ள அனைத்து மகளிருக்கும் போய் சேர வேண்டும் என்பதில் நம்முடைய அரசு மிகவும் கவனமாக இருந்தது. அரசே உங்களிடம் வந்து எப்படி வாங்கினார்களோ, அதேபோல அந்த விண்ணப்பங்களை வாங்குகின்ற முகாம்களை அமைக்கச் சொன்னேன்.

கடந்த ஜூலை 24-ஆம் தேதி, தருமபுரி மாவட்டம் தொப்பூரில் அந்த முகாமை நானே நேரில் சென்று தொடங்கி வைத்தேன். ஏறக்குறைய ஒரு கோடியே 63 லட்சம் மகளிர் விண்ணப்பித்தார்கள். இதற்கும் சிலர் விமர்சனம் செய்தனர். மக்கள் புரிந்து கொண்ட திட்ட,ம் தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று சொன்னதை, தேர்தல் வாக்குறுதிக்கு முரணாக செய்கிறார்கள் என்று பேசினர்.

நாம் தொடக்கத்தில் இருந்தே தெளிவாகச் சொன்னோம். தகுதி உள்ளவர்கள் யார் யாரென்று நேர்மையான, பாரபட்சமற்ற
விதிமுறைகளின் அடிப்படையில், அரசு சார்பில் வெளியிடப்பட்டு, தமிழ்நாட்டில் இருக்கின்ற அத்தனை குடும்ப அட்டைதாரர்களையும் விண்ணப்பிக்கச் சொன்னோம். இந்தத் திட்டத்தின் நோக்கத்தையும், விதிமுறைகளின்
குறிக்கோளையும் மக்கள் உள்ளார்ந்து புரிந்து கொண்ட காரணத்தால், 2 கோடியே 24 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில், 1 கோடியே 63 லட்சம் மகளிர் மட்டும் விண்ணப்பித்தனர்.

மக்களுடைய இந்த புரிதல், இந்தத் திட்ட விதிமுறைகளுக்கான நியாயத்தைக் காண்பித்தது. விமர்சித்தவர்கள் அமைதி ஆகிவிட்டார்கள். விண்ணப்பத்தவர்களிலிருந்து, 1 கோடியே 6 லட்சத்து 58 ஆயிரத்து 375 தகுதியுள்ள மகளிர் தேர்ந்தெடுக்கப்பட்டு, எல்லோருக்கும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் இந்தத் திட்டம் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாகவே, அந்த மாதத்திற்கான உரிமைத் தொகையான 1,000 ரூபாயை நாம் வரவு வைத்தோம்.

அந்த மாதம், வங்கிக் கணக்கு இல்லாத 2 லட்சத்து 42 ஆயிரத்து 956 பயனாளிகளுக்கு, மணி ஆர்டர் மூலம் ஆயிரம் ரூபாய்
வழங்கப்பட்டது. மணி ஆர்டர் மூலம் உரிமைத் தொகை வழங்கப்பட்ட மகளிருக்கு, வங்கிக் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். எந்த சிறிய புகாருக்கும் இடமில்லை. அதுதான், இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய வெற்றி. அதனை பெருமிதத்துடன் சொல்கிறேன், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் நாட்டிற்கே முன்னுதாரணமாக அமைந்திருக்கக்கூடிய திட்டம்.

இந்த மாதத்திலிருந்து 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிர் புதிய பயனாளிகளாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர். புதிய பயனாளிகளுக்கு 1,000 ரூபாயை நேற்றே வரவு வைக்கப்பட்டுள்ளது. உங்களுடன் சேர்த்து, மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84
ஆயிரத்து 300 பேர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1,000 ரூபாய் இனி பெறப் போகின்றனர்.

மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பம் சரிபார்ப்பு அலுவலர்கள் களஆய்வு செய்து, தகுதி பெறும் மகளிருக்கு, வருகிற டிசம்பர் மாதத்தில் இருந்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலமாக 1,000 ரூபாய் வழங்கப்படும். தகுதியுள்ள அனைவருக்கும் இந்த உரிமைத் தொகை கிடைக்கின்ற வரைக்கும், திராவிட மாடல் அரசின் இந்தப் பணி நிச்சயம் தொடரும். திராவிட மாடல் ஆட்சியில், இந்தியாவிற்கே எடுத்துக்காட்டான மாநிலமாக, தமிழ்நாடு தொடர்ந்து வளரும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த தடை.. ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு நவ.15-இல் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details