தமிழ்நாடு

tamil nadu

“2021இல் அதிமுக ஆட்சி தொடரும்”- முதலமைச்சர் பழனிசாமி உறுதி

By

Published : Oct 7, 2020, 11:39 PM IST

சென்னை: அப்பனுக்குப் பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என்ற வம்சாவளி அரசியல் இங்கே கிடையாது என்று கூறியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2021ஆம் ஆண்டில் மூன்றாம் முறையாக ஆட்சியைக் தொடர்கிற அரசியல் புரட்சியை கழக உடன் பிறப்புகளாகிய உங்களின் ஒத்துழைப்போடு நிறைவேற்றி காட்டுவேன் என தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

cm-edapadi-palanisamy-wrote-letter-to-his-cadres
cm-edapadi-palanisamy-wrote-letter-to-his-cadres

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று (அக்.7) கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ''புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆகியோரின் அன்புத் தொண்டர்களாகிய உடன் பிறப்புகளுக்கு என் அன்பான வணக்கம்.

ஆழமாய் வேர் விட்டு ஆயிரமாயிரம் கிளைகள் பரப்பி, பூத்து குலுங்குகிற இந்த பொன்மனத்து இயக்கத்தின் சார்பில் 2021ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் வேட்பாளராக உங்கள் அனைவரின் ஆசிகளோடு ஒருமித்த கருத்தால் நான் அறிவிக்கப்பட்டு இருக்கிறேன்.

உழவன் வீட்டில் உதித்த ஒருவனும், உழைத்தால் முதலமைச்சராக முடியும் என்பதற்கு ஜனநாயக சாட்சியாக இந்த எளிமைச் சாமானியனை ஒன்றரை கோடி தொண்டர்களின் இயக்கம் அடையாளப்படுத்தி இருக்கிறது.

இதற்காக என் ஆயுளின் கடைசி விநாடி வரை இந்த இயக்கத்திற்கு நான் நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன்.

எண்ணியது செய்திடல் வேண்டும், எதிலும் புண்ணியமே நிறைந்திட வேண்டும், நீதிக்கு தலைவணங்கி நடக்க வேண்டும், நினைத்ததெல்லாம் முடிக்க வேண்டும் என்னும் உயரிய லட்சியங்களை உள்ளத்தில் கொண்டு, புரட்சித்தலைவர் அவர்கள் தன் உதிரத்தின் ஈரத்தில் விதையூன்றிய இயக்கத்தில் ஒரு கடைக்கோடி தொண்டனாக அன்று என் அரசியல் வாழ்வை தொடங்கிய இந்த விவசாயியை, ஊர் நின்று பார்க்கும் அளவுக்கு, உச்சத்துக்கு அழைத்து வந்து, நான் தினந்தோறும் பூஜித்து வணங்கும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கனிவுக் கரங்கள் தான்.

அந்த தெய்வத்தாய், எனக்குப் பின்னாலும் நூறு ஆண்டுகள் ஆனாலும் தமிழ் நாட்டை ஆளும் என புனிதமிக்க சட்டப்பேரவையில் தன் கடைசி சூளுரையாய் விடுத்துப் போன சபதத்தை முன்னெடுத்து நிறைவேற்றி முடிப்பதற்கு, என்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்திருக்கும் கழக ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் அண்ணன் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கும், தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும், பல்வேறு அணிகளை சார்ந்த நிர்வாகிகளுக்கும், கழகமே உலகமென வாழும் கழக உடன்பிறப்புகளுக்கும், இவ்வேளையில் என் நெஞ்சார்ந்த நன்றியை சமர்ப்பிக்கின்றேன்.

வெறும் எழுத்துக்களால் மட்டும் நான் உரைக்கும் நன்றி நின்று விடாது. 2021ஆம் ஆண்டில் மூன்றாம் முறையாக ஆட்சியைக் தொடர்கிற அரசியல் புரட்சியை கழக உடன் பிறப்புகளாகிய உங்களின் ஒத்துழைப்போடு நான் நிறைவேற்றி காட்டுவேன் என்பது சத்தியம்.

“என் மக்கள் எதற்காகவும், யாரிடத்திலும் கையேந்தி நிற்காத காலத்தை உருவாக்குவேன்” என்னும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கனவை நனவாக்கிக் காட்டுகிற கடமை நம் முன்னே காத்திருக்கிறது.

அம்மா விட்டுச் சென்ற அரசாட்சியை எப்படி உங்களின் நல் ஆதரவோடு இந்தியாவே பாராட்டும் பொற்கால ஆட்சியாக, ஓயாத உழைப்பால் நாம் உயர்த்திக் காட்டினோமோ, எப்படி ஒட்டு மொத்த செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி விகிதங்களுக்காக இந்தியாவின் தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு என்கிற பெருமையை மத்திய அரசின் விருதுகளால் நாம் நிலைநாட்டி இருக்கிறோமோ, அந்த பொற்காலத்தை மீண்டும் உருவாக்கி சரித்திரம் படைத்திடுவோம்.

இங்கே, அப்பனுக்குப் பின் மகன், மகனுக்குப் பின் பேரன், பேரனுக்குப் பின் கொள்ளு பேரன் என்கிற வம்சாவளி அரசியல் கிடையாது. உழைப்பவரே உயர்ந்தவர் என்பதை போதித்த புரட்சித் தலைவரின் வழிநடக்கும் கழகத்தில் உழைத்தால் உயர முடியும் என்பதற்கு நானும் ஒரு சாட்சி.
எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனங்களின் உண்மைத்தன்மையை உரசிப் பார்த்து அவற்றில் உள்ள ஆக்கப்பூர்வங்களை நாம் ஏற்றுக் கொள்பவர்கள். அதே வேளையில் வழிசொல்ல மாட்டோம். பழி மட்டுமே சொல்வோம் என்கிற உள்நோக்கத்திலான காழ்ப்புணர்ச்சி குற்றச்சாட்டுகளை நாம் கடந்து செல்லக்கூடியவர்கள்.

“தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே” என்னும் புரட்சித்தலைவரின் பொன்மொழிகளை மனதில் ஏற்று தினம் பாடுவோம். வழியெங்கும் வாகை நமக்காகக் காத்திருக்கிறது. திசையெங்கும் கிழக்காகும் தித்திப்பு காலம் நமக்காக பூத்திருக்கிறது. இதற்காக குருதியிலே உறுதி கலந்து உழைப்போம்.

2021-லும் புரட்சித்தலைவி அம்மாவின் லட்சிய அரசை புனித ஜார்ஜ் கோட்டையிலே மீண்டும் படைப்போம்'' என கூறியுள்ளார்.

இதையும் படிங்க:ஓபிஎஸ்- ஈபிஎஸ் நேரில் சந்திப்பு!

ABOUT THE AUTHOR

...view details