சென்னை:கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, கடந்த பிப்ரவரி மாதம், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.
சுதந்திர இந்தியாவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் 32ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்ற அவர், இன்றுடன்(செப்.12) பணி ஓய்வு பெறுகிறார். கடந்த 11 மாதங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்த காலத்தில், நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, கோயில் அர்ச்சர்கர்கள் ஆகம விதிப்படி தான் நியமிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது,
ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி நளினியை விடுதலை செய்ய மறுத்தது, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது, சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் சாலையில் வாகன போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகள் விதித்தது,
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்தது, கோயில் சொத்துக்களை அரசு சொத்துக்களாக கருத முடியாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்ப்புக்ளை வழங்கியுள்ளார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பணி ஓய்வு பெறுவதையொட்டி, உயர் நீதிமன்றம் சார்பில் அவருக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், பிரிவு உபசார உரை நிகழ்த்தினார். அப்போது அவர், குறுகிய காலத்தில் பதவியேற்ற நேரத்தில் கூறியபடி நீதி பரிபாலனத்தை விரிவுபடுத்தியதாகக் கூறி, அவர் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவுகளைச் சுட்டிக்காட்டினார்.