தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.. துரைமுருகனுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்.. - திட்டதிற்கு போதிய நிதி ஒதுக்கீடு

சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதத்தை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் பாமக வழக்கறிஞர் பாலு அளித்தார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 14, 2023, 8:50 PM IST

சென்னை: அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசன திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதத்தை சென்னை தலைமை செயலகத்தில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்து பாமக வழக்கறிஞர் பாலு அளித்தார். அதன் பின்னர் செய்தியாளிடம் பேசிய வழக்கறிஞர் பாலு, ”அரியலூர் சோழர் பாசனம் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்ட ஆய்வறிக்கையை பட்ஜெட்டில் வெளியிட வேண்டும் எனவும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அளித்த கடித்தை நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் அளித்துள்ளதாக கூறினார்.

மேலும் சோழர் பாசனத் திட்டம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் எனவும், இவற்றை செயல்படுத்தினால் அரியலூர் மாவட்டத்தில் 90,000 ஏக்கர் பாசன வசதி பெறும் எனவும் தெரிவித்தார். குறைந்த நிதி செலவில் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் அரியலூர் மாவட்டம் செழுமை பெறும். மேலும் அரியலூர் மாவட்டத்தின் மூன்றாவது பெரிய ஏரியான சுக்கிரன் ஏரியின் பரப்பளவு 1187 ஏக்கர். சுக்கிரன் ஏரி 1060 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரை ஒருமுறை கூட சுக்கிரன் ஏரி முழுமையாக தூர்வாரப்படவில்லை.

ஒரு காலத்தில் தென்னை மரமே மூழ்கும் அளவுக்கு ஆழமாக இருந்த சுக்கிரன் ஏரியில், இன்று 5 அடி ஆழத்திற்கு கூட தண்ணீரைத் தேக்க முடியவில்லை. அரியலூர் மாவட்டத்தில் தூத்தூரில் அமைந்துள்ள தூத்தூர் ஏரி, காமரசவல்லியில் அரசன் ஏரி, ஏலாக்குறிச்சி வண்ணான் ஏரி, வேங்கனூர் ஆண்டியோடை ஏரி, சுள்ளான்குடி ராமுப்பிள்ளை ஏரி, பளிங்கநத்தம் மானோடை ஏரி போன்றவை 100 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் அமைந்துள்ள ஏரிகளாகும்.

அரியலூர் மாவட்டத்தின் பெரிய ஏரிகளுக்கு கொள்ளிடம் ஆறு, புள்ளம்பாடி கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் வருவதற்கும், பெரிய ஏரிகள் நிரம்பினால் அதன் உபரி நீர் தானாகச் சென்று சிறிய ஏரிகளை நிரப்பிவிடும் கட்டமைப்பு கொண்டது. இத்தகைய கட்டமைப்பு தமிழ்நாட்டின் வேறு எந்த மாவட்டங்களிலும் இல்லை. சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட இத்தகைய கட்டமைப்புகள் முறையாக பராமரிக்கப்படாதது தான் அரியலூர் மாவட்டம் இப்போது எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு காரணமாகும்.

எனவே, தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரும் 20ஆம் நாள் தாக்கல் செய்யப்படவுள்ள 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை இடம்பெறச் செய்ய வேண்டும். அத்திட்டத்தை ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும், அதன் அடிப்படையில் அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்தவும், அந்த திட்டதிற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என அன்புமணி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்ட நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இது நியாயமான பிரச்சனை எனவும், சோழர் பாசன திட்டம் கோரிக்கை அரசால் பரிசீலிக்கப்படும் என தெரிவித்ததோடு சட்டமன்ற கூட்ட தொடரில் உரிய அறிவிப்பை வெளியிடுவோம் என உத்தரவாதம் அளித்துள்ளார். அமைச்சரின் பதில் பெரிய நம்பிக்கையை தருவதாகவும், அரியலூர் இதன் மூலம் டெல்டா மாவட்டமாகக்கூடிய வாய்ப்பு உள்ளது எனவும் பெருமிதம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023 வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details