கடந்த அக்டோபர் மாதம் 11, 12ஆம் தேதிகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் மகாபலிபுரத்தில் சந்தித்துப் பேசினர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்பில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க சீனா முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
தமிழ்நாட்டிற்கு வருகை தரும் சீன அலுவலர்கள்!
சென்னை: பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்புக்குப் பிறகு, இந்த வாரம் மீண்டும் சீன அலுவலர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்புக்காக தமிழ்நாடு சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து பிரதமர் மோடியும் சீன அதிபரும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வாரம் சீனாவிலிருந்து அலுவலர்கள் வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரும் 4ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் அவர்கள் பயணம் செய்யவுள்ளதாக தமிழ்நாடு அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
சீன அலுவலர்கள் சென்னையைச் சுற்றியுள்ள தொழில் பூங்காவுக்குச் சென்று பார்வையிட உள்ளதாகவும், சென்னை மாநகராட்சியின் குடிநீர் வழங்கல் துறை அலுவலர்களைச் சந்திப்பார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சீன அலுவலர்களின் வருகைக்காக தமிழ்நாடு தொழில்துறை, வெளியுறவுத் துறையுடன் இணைந்து பல ஏற்பாடுகளை செய்து வருகிறது.