மூத்த குடிமக்கள் புகார் அளித்தால் 6 வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மூத்த குடிமக்கள் புகார் மனு
சென்னை: பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது புகார் அளித்தால் 6 வார காலத்திற்குள் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய் கோட்டாட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தாக்கல்செய்த மனுவில், "மத்திய அரசு 2007ஆம் ஆண்டு கொண்டுவந்த பெற்றோர் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்புச் சட்டத்தை அமல்படுத்தும்வகையில் தமிழ்நாடு அரசு 2009ஆம் ஆண்டு விதிகளை வகுத்தது. இருப்பினும் இந்தச் சட்டத்தை அலுவலர்கள் அமல்படுத்துவது இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகன்களால் பராமரிக்கப்படாத பெற்றோரிடமிருந்து புகார்களைப் பெற மண்டல வருகை அதிகரிக்க இந்தச் சட்டப்பிரிவு அதிகாரம் வழங்கியுள்ளது. ஆனால் இந்தச் சட்டத்தை அமல்படுத்த அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் சட்டத்தை அமல்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியுள்ளார்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு, பெற்றோர் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்புச் சட்டத்தின்படி பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது மூத்த குடிமக்கள் புகார் அளித்தால் 6 வார காலத்திற்குள் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது.