சென்னை: தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் சென்னை மயிலாப்பூர் சாந்தோம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 'சிறுபான்மையினர் உரிமைகள் நாள்' என்ற நிகழ்வு நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள் பேசியதாவது:
சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், "இந்தியாவில் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. அனாதை பிணங்களைக் கூட தமது தோளில் சுமந்து அடக்கம் செய்தவர்கள் இசுலாமியர்கள். சிறுபான்மையினர் குறித்து சிலர் தவறாக கூறுவது குறிப்பிட்ட ஒரு கட்சியை வளர்ப்பதற்காக சொல்லப்படும் பொய் குற்றச்சாட்டு, அதில் உண்மை இல்லை" என்றார்.
அமைச்சர் மனோ தங்கராஜ், "கடந்த காலத்தில் தமிழ்நாட்டில் வழிபாட்டுரிமைக்கே அச்சுறுத்தல் இருந்தது. சிறுபான்மை என்ற வார்த்தைக்கு சமூக ஊனம் என்று அர்த்தம். மத அரசியல் நடத்துவோர் குறித்து தமிழ்நாடு மக்கள் கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.