சென்னை:சேமிப்பே ஒருவரின் எதிர்கால வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக மாற்றுகிறது எனவும், சேமிப்பது மட்டுமல்ல, அதைச் சரியான விதத்தில் முதலீடு செய்வதும் முக்கியம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று (அக்.30) உலக சிக்கன தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக சிக்கன நாள் வாழ்த்துச் செய்தியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது, "சிக்கனத்தின் இன்றியமையாமையை அனைவருக்கும் உணர்த்திடும் நாளாக, அக்டோபர் திங்கள் 30ஆம் நாள், ஆண்டுதோறும் உலக சிக்கன நாள் எனக் கொண்டாடப்படுவதைக் குறித்து பெருமகிழ்ச்சி அடைவதுடன், என் மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு குடும்பமும் சிக்கனத்தைக் கடைப்பிடித்து சேமித்தால், அதன்வாயிலாகக் குடும்பத்தின் தேவைகளை நிறைவு செய்துகொள்வதுடன், அவ்வப்போது ஏற்படும் எதிர்பாரச் செலவினங்களையும் சமாளித்திட இயலும். "ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை". என்ற குறளில் வள்ளுவர் பெருந்தகை, பொருள் வரும் வழி சிறிதாக இருந்தாலும், பொருள் செலவாகும் வழி பெரிதாக இல்லையெனில், அதனால் தீங்கு இல்லை என்று சிக்கனமாக வாழ்தலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார்.