தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 3, 2023, 9:31 PM IST

ETV Bharat / state

சென்னையில் பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் திடீர் ஆய்வு… காரணம் என்ன?

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும், பழவந்தாங்கல் காவல் நிலையத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டபோது செல்லும் வழியில் நின்றிருந்த அமமுக நிர்வாகி சி.ஆர். சரஸ்வதியை நலம் விசாரித்தார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சென்னை மாநகராட்சியில் பல்வேறு பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுமேற்கொண்டார். மேலும் பழவந்தாங்கல் காவல் நிலையத்திற்கும் திடீர் விசிட் அடித்து ஆய்வு மேற்கொண்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். சாலையில் ரூ.71.31 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், போரூர் ஏரியில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய மதகு அமைத்தல் மற்றும் போரூர் ஏரி முதல் ராமாபுரம் ஓடை வரை கால்வாய் அமைக்கும் பணிகள், அசோக் நகர் 4வது நிழற்சாலை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் ரூ.7.60 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

போரூர் ஏரியில் தற்போது உபரி நீர் செல்லும் நிலங்கள் முழுவதும் குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டதாலும், ஏரியின் குறுக்கே புறவழிச்சாலை அமைக்கப்பட்டதாலும், ஏரியின் உபரி நீர் வெளியேறுவதற்கு வழியில்லாமல் போரூர் ஏரியின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கொளுத்துவான்சேரி, சீனிவாசபுரம், பரணிபுத்தூர், பட்டூர், மற்றும் அய்யப்பன்தாங்கல் கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த ஆண்டு பருவமழையின்போது மேற்கண்டப் பகுதிகள் பெரும் வெள்ளப்பாதிப்புக்கு உள்ளானது.

மேலும், வெள்ளப்பாதிப்பு அடையாமல் இருப்பதற்காக ரூ.100 கோடி மதிப்பீட்டில் போரூர் ஏரி பகுதியில் வெள்ளப்பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப் பணிகள், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் போரூர் ஏரியில் நடைபெற்று வரும் புதிய மதகு அமைத்தல் மற்றும் போரூர் ஏரி முதல் இராமாபுரம் ஓடை வரை புதியதாக மூடிய வடிவிலான கால்வாய் அமைக்கும் பணிகளையும் இன்று ஆய்வு செய்தார்.

பின்னர் பழவந்தாங்கல் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காவல் நிலையத்தில் உள்ள பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தேவையான உதவிகளை செய்திடுமாறு காவல்துறையினரை அறிவுறுத்தினார்.

மாநிலப் பேரிடர் நிவாரண நிதியின்கீழ், 7 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அசோக் நகர் 4வது நிழற்சாலை மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளையும் ஆய்வு செய்தார். அசோக் நகர் 4வது அவென்யூவில் மழை நீர் வடிகால் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்துவிட்டு புறப்பட்டபோது, அமமுக நிர்வாகி சி.ஆர். சரஸ்வதி சாலையில் நிற்பதை கண்ட முதலமைச்சர் தனது வாகனத்தை விட்டு இறங்கி வந்து "நல்லா இருக்கீங்களா?'' என நலம் விசாரித்தார்.

இதனைத்தொடர்ந்து சி.ஆர். சரஸ்வதி அசோக் நகர் பகுதியில் மழைக் காலங்களில் வெள்ள நீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சி.ஆர். சரஸ்வதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறங்கி வந்து நலம் விசாரித்து, எங்கள் பகுதி மழை நீர் வடிகால் பணிகளை சீரமைத்து தருவதாக உறுதி அளித்துள்ளார் எனவும், முதலமைச்சர் இறங்கி வந்து பேசியது மிகப் பெரிய மகிழ்ச்சியை அளிப்பதாகவும், இவற்றை தான் எதிர்பார்க்கவில்லை எனவும் கூறினார்.

இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள், க.பொன்முடி, தா.மோ.அன்பரசன், மேயர் ஆர்.பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: Asian hockey championship: வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் - அமைச்சர் உதயநிதி உறுதி

ABOUT THE AUTHOR

...view details