சென்னை: ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தங்களின் கோரிக்கைக்காக தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. அதிமுக ஆட்சிகாலத்தில் ஜாக்டோ-ஜியோ தொடர் வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்தியது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் போராட்டக் களத்திற்கு வந்து ஆதரவு தெரிவித்ததுடன் அவர்களின் கோரிக்கை ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றப்படும் என அறிவித்து வந்தார். மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஆசிரியர் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர்.
திமுக ஆட்சி அமைந்தவுடன் கரோனா தொற்றை சமாளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்கள். இதனால் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் திமுக ஆட்சியில் தங்களுக்குரிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் சட்டமன்றத்தில் கடந்த 7ஆம் தேதி நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடியாது என விளக்கத்துடன் எடுத்துக் கூறினார். இது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மீண்டும் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் செல்வம், சேகர், காந்திராஜன்,இரா.தாஸ்,மாயவன், அன்பரசு, தியாகராஜன் உள்ளிட்ட 19 சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.