சென்னை:சென்னை மாவட்டம் சேத்துப்பட்டு பசுமை பூங்கா ரூ. 48 கோடி செலவில் அதிமுக அரசால் கட்டப்பட்டது. அதனை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறந்து வைத்தார். இந்த சுற்றுச்சூழல் பூங்கா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால், உள்ளூர்வாசிகள் முதல் சுற்றுலா பயணிகள் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
குறிப்பாக மாலை நேரத்தில் குழந்தைகளுக்கான சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருந்து வந்தது. இந்த பூங்கா தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் கண்காணிக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வந்தது. பூங்கா வளாகத்தில் இருக்கும் ஏரியில் படகு சவாரி மேற்கொள்ளும் வசதி சுற்றுலா பயணிகளால் அதிகம் ஈர்க்கப்பட்டது.
மாலை நேரங்களில் பூங்கா, ஏரியை குருசாமி பாலத்தில் இருந்து வாகன ஓட்டிகள் பார்த்துச் செல்வர். உணவு அரங்கம், 1.5 கிமீ அளவிற்கு நடைபாதை, மீன்பிடித்தல் மற்றும் பல வசதிகள் பூங்காவில் உள்ளன. தாவரங்கள் நிறைந்த அழகிய நீர்த்தேக்கமாகவும் இருந்து வந்தது.
வெறிச்சோடிய பூங்கா : 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘வர்தா’ புயல் பூங்காவின் வளாகத்தில் உள்ள மரங்களையும் விளக்குகளையும் தரைமட்டமாக்கியது. பின்னர் பூங்காவை தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகம் பூங்காவை சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. பிறகு ஏராளமான சுற்றுலாப் பயணிகளுடன் படகு சவாரி மீண்டும் தொடங்கியது.
சேத்துப்பட்டு பசுமை பூங்கா ஆரம்பத்தில் அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது. எனினும் படிப்படியாக இந்த பூங்கா அதன் களையை இழந்து தற்போது வெறிச்சோடிய இடமாக மாறியுள்ளது.
இது குறித்து பூங்கா ஊழியர்கள் கூறுகையில், "கரோனா பெருந்தொற்றின் முதல் அலை மார்ச் மாதம் 2020இல் தொடங்கியவுடன் பூங்கா மூடப்பட்டது. முதல் அலைக்கு பிறகு பூங்கா திறக்கப்பட்ட போதும், சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்தது. இரண்டாவது அலைக்கு பின்னர் பொதுமக்கள் வருகை முற்றிலுமாக குறைந்து பாலைவனமாக மாறியது என்றே சொல்லலாம்.