தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலருடன் பெண் வழக்குரைஞர் வாக்குவாதம் செய்த விவகாரம்: முன் ஜாமீன் தள்ளுபடி!

ஊரடங்கு விதிகளை மீறி வெளியே வந்தததோடு, கரோனா தடுப்பு பணியில் இருந்த காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்குரைஞர், அவரது மகள் ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

By

Published : Jun 10, 2021, 9:03 PM IST

Chennai Highcourt
உயர் நீதிமன்றம்

சென்னை:வழக்குரைஞரின் செயல்பாடு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், முன் ஜாமீன் வழங்க முடியாது என, நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை சேத்துபட்டு சிக்னலில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆனந்தன், தலைமைக் காவலரான ரஜித்குமார் உள்ளிட்ட காவலர்கள், கடந்த வாரம் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை வழி மறித்து விசாரணை செய்தனர். காரை ஓட்டி வந்த சட்டப்படிப்பு படிக்கும் மாணவி பிரீத்தி ராஜனின் ஓட்டுனர் உரிமத்தைப் பெற்ற காவலர்கள், அபராத ரசீதை கொடுத்தனர்.

இதில் ஆத்திரமடைந்த மாணவி நடந்த விஷயத்தை வழக்குரைஞரான தன் தாயிடம் கூறி, சம்பவ இடத்துக்கு வரவழைத்தார். அங்கு வந்த அவரது தாயார் தனுஜா ராஜன், முகக்கவகவசம் இல்லாமல் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

ரசீதை வீசி எறிந்து இருவரும் கிளம்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து தலைமைக் காவலர் ரஜித் குமார் அளித்த புகாரில், சேத்துப்பட்டு காவல்நிலையத்தில் ஆறு பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுப்பது, பேரிடர் மேலாண்மை விதி மீறல் உள்ளிட்ட சட்டப் பிரிவின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக நேரில் ஆஜராகும்படி காவல்துறை சார்பில் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், தாய், மகள் ஆகிய இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், காவல்துறை கூறுவது போல் மீன் வாங்க செல்லவில்லை என்றும், மருந்து வாங்கச் சென்ற மகளை காவல்துறை தடுத்ததால் அங்கு வந்து காவல்துறையிடம் விளக்கம் கேட்டதாக வாதிடப்பட்டது.

காவலர்களைப் பேசிய கடுமையான மோசமான வார்த்தைகள் அடங்கிய வீடியோ எடிட் செய்யப்பட்டு, வழக்குரைஞர் சமூகத்தினரின் பெயரை கெடுக்கும் வகையில், ஒரு பகுதி மட்டுமே வெளியிடப்பட்டதாகவும், உணர்ச்சி வசப்பட்டு மட்டுமே தான் பேசியதாகவும், உள்நோக்கம் ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளதால், முன் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மக்களை காக்கும் பணியிலும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தும் பணியிலும் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினரிடம் இதுபோல நடந்து கொள்ளக்கூடாது என அறிவுறுத்தல் வழங்கினார்.

இதுபோன்ற ஒரு சம்பவத்தில் முன் ஜாமீன் வழங்கினால் தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும் என்பதாலும், வழக்குரைஞரின் செயல்பாடு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதாலும், முன் ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் வழக்குரைஞர் மெஹ்ருனிசா, உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் ஆர்.கிருஷ்ணமுர்த்தி ஆகியோரும், வழக்குரைஞர் சமூகத்தின் தரப்பில் பார் கவுன்சில் முன்னாள் தலைவர் டி,செல்வம், பெண் வழக்குரைஞர் சங்கத் தலைவர் லூயிசால் ரமேஷ், வழக்குரைஞர் ரேவதி ஆகியோரும், காவல்துறை தரப்பில் பெருநகர தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஜெய்சங்கர் ஆகியோர் ஆஜராகினர்.

ABOUT THE AUTHOR

...view details