சென்னை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்ற முறைகேட்டின் எதிரொலியாக தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரிய 97 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களில் பணிபுரிவதற்கான ஆன்லைன் போட்டி எழுத்துத் தேர்விற்கு சொந்த மாவட்டங்களில் தவிர்த்து வேறு மாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்குவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
பள்ளிக் கல்வித் துறையின்கீழ் வட்டார கல்வி அலுவலர் 2018 -19ஆம் ஆண்டில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆன்லைன் ஜனவரி 9ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் பெற்றது.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பொழுது தங்கள் விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின் உண்மை நகல்களை பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே அறிவிப்பின் வழியாக படித்து உரிய விதிமுறைகளை தெரிந்துகொண்டு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் தவறாமல் பதிவேற்றம் செய்திட வேண்டும் எனக் கூறியிருந்தது.
இந்நிலையில், வட்டார கல்வி அலுவலர் பணிகளுக்கான ஆன்லைன் போட்டி தேர்வு பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை எழுத சுமார் 64 ஆயிரம் தேர்வர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் பொழுது தங்களின் சொந்த மாவட்டத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் விண்ணப்பித்தனர்.
ஆனால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்ற குரூப் 4, குரூப் 2ஏ தேர்வு முறைகேடு எதிரொலியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் பல்வேறு புதிய நடைமுறைகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் அவர்களின் சொந்த மாவட்டத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படவுள்ளனர். கர்ப்பிணிகள் கர்ப்பமாக இருப்பதற்கு உரிய சான்றிதழுடன் கோரிக்கைவைத்தால அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட உள்ளது. ஏற்கனவே விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளிக்கான ஆவணங்களை அளித்திருப்பார்கள்.
அதன் அடிப்படையில் அவர்களுக்கு சொந்த மாவட்டம் தேர்வு மையமாக ஒதுக்கீடு செய்யப்படும். வட்டார கல்வி அலுவலர் பணி என்பது மாநில அளவில் பணிபுரிய வேண்டியது. மேலும் எந்தவித முறைகேடும் நடைபெறாமலும், முற்றிலும் நேர்மையாக நடைபெறும் வகையில் தேர்வர்களின் சொந்த மாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படாமல் தமிழ்நாட்டில் உள்ள ஏதாவது ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.