சாலை விபத்துகளைக் குறைக்க கட்டாயமாக வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில், தலைக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்துக் காவல் துறையினர் அபராதத்தை வசூலித்துவருகின்றனர். அபராதத்துக்குப் பயந்து பொதுமக்கள் பலரும் தலைக்கவசம் அணிந்துகொண்டு வாகனம் ஓட்டிவருகின்றனர்.
ஆனால், காவல் துறையினர் சாலை விதிகளை மதிக்காமல் தலைக்கவசம் அணியாமல் சென்றுவருவதைக் கண்ட சமூக செயற்பாட்டாளர் காசிமாயன் சோழிங்கநல்லூர் பகுதியில் செல்வதைப் புகைப்படம் எடுத்து ஆதாரங்களுடன் மாநகரக் காவல் ஆணையருக்கு அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து, தலைக்கவசம் அணியாமல் சென்ற காவல் துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், இதுவரையில் அவர்கள் அபராதத்தை செலுத்தவில்லை என்பது தெரியவருகிறது.
இதனைத்தொடர்ந்து, காசிமாயன், வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் சென்றதாகக் கூறி போக்குவரத்துக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்றுள்ளார். தற்போது இந்த அறிக்கை பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கையில் சென்னையில் 2019ஆம் ஆண்டு தலைக்கவசம் அணியாமல் சென்றதாக சுமார் 12 லட்சத்து 80 ஆயிரத்து 336 நபர்கள் மீது சென்னை போக்குவரத்துக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.