சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இந்தியன் ரயில்வே செயல்பட்டு வருகிறது. ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) இணையதளம் இயங்கி வருகிறது. இந்த இணையதளம் அவ்வப்போது புதிதாக அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்திலிருந்த குறைபாட்டை சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த பா.ரங்கநாதன் (17) என்ற மாணவன் கண்டறிந்துள்ளார். இவர் சேலையூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு வணிகவியல் பிரிவில் படித்து வருகிறார்.
பள்ளி தரவுகள் திருட்டு
இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் ரங்கநாதன் கூறியதாவது, "நான் இணையப் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறேன். கடந்த ஆண்டு எங்கள் பள்ளிக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சேருவதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்திருந்தனர். அதனை அடையாளம் தெரியாத நபர்கள் ஹேக் செய்து தொலைபேசி மூலம் அவர்களைத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். இதனைப் பள்ளி நிர்வாகம் மூலம் அறிந்தேன். இது குறித்து ஆய்வு செய்த போது இணைய வழியிலிருந்து தரவுகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனைப் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தேன், உடனே சரிசெய்யப்பட்டது.
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஆர் புரோட்டோகால்ஸ் என்ற இணையத்தை உருவாக்கினேன். அதுமட்டுமில்லாமல் லிங்க்டு இன், லெனோவா போன்ற 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் இணையதளத்திலிருந்த குறைபாட்டையும் கண்டறிந்து அவர்களுக்கு வழிமுறைகளை வழங்கியுள்ளேன். கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி எனது தனது தாத்தா, பாட்டியின் ரயில் பயணத்துக்காக ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தேன். அப்போது வலைத்தளம் இயங்கும் கோடிங் குறித்து தற்செயலாக ஆராய்ந்தேன். அதில், சில குறைபாடுகள் இருந்ததைக் கண்டுபிடித்தேன்.