தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 18, 2022, 10:42 PM IST

ETV Bharat / state

'''சென்னை பிரதேசம்' என்ற அடையாளமற்ற மாநிலமாகத்தான் இருந்திருக்கும்..’’ - 'தமிழ்நாடு திருநாள்' குறித்து முதலமைச்சர் உணர்ச்சிமிகு பேச்சு!

'‘சென்னை பிரதேசம்’ என்ற அடையாளமற்ற மாநிலமாகத்தான் இன்று வரை தமிழ்நாடு இருந்திருக்கும்' என, முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு திருநாள் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

‘சென்னை பிரதேசம்’ என்ற அடையாளமற்ற மாநிலமாகத்தான் இருந்திருக்கும்.. தமிழ்நாடு திருநாள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!
‘சென்னை பிரதேசம்’ என்ற அடையாளமற்ற மாநிலமாகத்தான் இருந்திருக்கும்.. தமிழ்நாடு திருநாள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு திருநாள் விழாவில் கலந்துகொண்டார். இதில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், “எத்தனையோ விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்தாலும், தமிழ்நாடு திருநாள் என்ற நிகழ்ச்சிக்கு இணையானது எதுவுமில்லை.

ஏனென்றால், ‘தமிழ்நாடு நாள்’, ‘தமிழ்நாடு திருநாள்’ என்று சொல்லும்போதே நமது உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதனைச்சொல்லும்போதே ஒரு ஆற்றல் பிறக்கிறது. “தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க!" என்று அண்ணா, 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள், தமிழ்நாடு சட்டப்பேரவையில் முழங்கிய முழக்கத்தை, மீண்டும் ஒரு முறை முழங்குவதன் மூலமாக என் உள்ளத்தில் மலர்ச்சி ஏற்படுகிறது.

அனுமதி மறுப்பு: செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே - என்று பாடினார் மகாகவி பாரதியார். அத்தகைய உணர்ச்சியை நாம் இன்று பெறுகிறோம். இத்தகைய உணர்ச்சியை ஊட்டும் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டிய சாதனையானது, சாதாரணமாக நடந்துவிடவில்லை.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலத்துக்கு, 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டுவதற்கே நாம் பல பத்தாண்டுகளாகப் போராட வேண்டி வந்தது, வாதாட வேண்டி இருந்தது, பேச வேண்டி இருந்தது, எழுத வேண்டி இருந்தது, உயிரைத் தர வேண்டி இருந்தது, ரத்தம் சிந்த வேண்டி வந்தது, மாநிலங்களவையில் குரல் எழுப்ப வேண்டி வந்தது, சட்டப்பேரவையில் தொடர்ந்து கேட்க வேண்டி வந்தது, தீர்மானங்களைக் கொண்டு வர வேண்டி வந்தது.

அத்தனைக்குப் பிறகும் 'தமிழ்நாடு' என்று சொல்வதற்கான அனுமதி கிடைக்கவில்லை. இறுதியாக, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்த காரணத்தால்தான், தாய்த் தமிழ்நாட்டுக்குத் 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட்டது. அண்ணா முதலமைச்சராக வந்ததால்தான் தாய்த்தமிழ்நாட்டுக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட்டது.

சென்னை பிரதேசம்: "தமிழாய்ந்த தமிழ்மகன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆதல் வேண்டும்" என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் குறிப்பிட்டாரே, அத்தகைய தலைமகனான அண்ணா தலைமையில், கருணாநிதி, நாவலர் போன்றவர்கள் அமைச்சர்களாக வந்ததால்தான், இந்தத் தாய்த் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கம் உருவாகாமல் போயிருந்தால், தமிழ்நாட்டில் இந்த இயக்கம் ஆட்சிக்கு வராமால் போயிருந்தால், இந்த மாநிலத்திற்கு இன்று வரையில் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்படாமலேயே இருந்திருக்கும் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம். உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், அருணாச்சலப்பிரதேசம் போல இதுவும், ‘சென்னை பிரதேசம்’ என்று அடையாளமற்ற மாநிலமாகத்தான், இன்று வரை இருந்திருக்கும் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.

திராவிடம் என்ன கிழித்தது என்று வாய் கிழியப் பேசுபவர்கள் இதனை அறிய வேண்டும். தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதைவிட, வேறு சாதனை ஏதாவது தேவையா? மூவாயிரம் ஆண்டு பழமைகொண்ட தமிழ்மொழிக்குச் செம்மொழி என்ற தகுதியைப் பெற்றுத் தந்தது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனை அல்லவா? இதனைவிட வேறு சாதனை தேவையா? இத்தகைய சாதனைச் சரித்திரத்துக்குச் சொந்தக்காரர்கள் நாம்.

அதனால்தான், தமிழ்நாடு நாளைத் 'தமிழ்நாடு திருநாளாக' நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் ஓர் இனம் உண்டென்றால், அது தமிழினம் தான். நம்முடைய இனம், ஒரு நிலத்தில் ஒரு நாட்டில் மட்டுமே வாழும் இனம் அல்ல; உலகளாவிய இனம்.

மூத்த மொழி தமிழ்: முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடுதான் தாய்வீடு. இவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடுதான் தாய்நாடு. “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி - நம்முடைய தமிழ்க்குடி!" அத்தகைய தமிழ்க்குடியின் தாய்மடி, இந்தத் தமிழ்நாடுதான்.

தமிழ்நாடு திருநாள் நிகழ்வு

தமிழ்நாட்டில், கி.மு.ஆறாம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பதை, கீழடி நமக்கு நிரூபித்துக் கொண்டு இருக்கிறது. அதேபோல், சிவகளை முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட உமி நீங்கிய நெல்மணிகளின் காலம் கி.மு.1155 எனக் கண்டறியப்பட்டுள்ளது.

‘தண் பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இவை அனைத்தும் உலகப் புகழ்பெற்ற மானுடவியல் ஆராய்ச்சியாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மைகள். “உலகில் முதலில் பிறந்த குரங்கு - தமிழ்க்குரங்குதான்" என்று நம்மைச் சிலர் அந்தக் காலத்தில் கிண்டல் செய்வார்கள். அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை.

நாம் எதைச் சொன்னாலும் ஆய்வுப்பூர்வமாகத்தான் சொல்கிறோம். சிலர் போலக் கற்பனையாகச் சொல்லவில்லை. அத்தகைய வரலாற்றுப் பெருமை கொண்ட நமது தமிழினம் வாழ்ந்த நிலப்பரப்புக்கு, தமிழ்நாடு என்ற பெயர் இல்லை. அதற்காகவும் போராட வேண்டி இருந்தது என்பது அவமானம் அல்லவா? அந்த அவமானம் துடைக்கப்பட்ட நாள்தான், இந்த ஜூலை 18-ஆம் நாள்” எனப் பேசினார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details