தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 17, 2022, 7:28 AM IST

Updated : Nov 17, 2022, 6:48 PM IST

ETV Bharat / state

பேஸ்புக்கில் பழக்கம்... ஒரு தலை காதல்... கேரள பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

தன்னை காதலிக்க மறுத்து கேரள இளம்பெண்ணை, வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ள கூடாது எனக்கூறி, நடுரோட்டில் வைத்து மதுபான பாட்டிலால் பெண்ணின் முகத்தை குத்தி சிதைத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பேஸ்புக்கில் பழக்கம்... ஒரு தலை காதல்... கேரள பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
பேஸ்புக்கில் பழக்கம்... ஒரு தலை காதல்... கேரள பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

சென்னை: கேரள மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் (20), ஏர்ஹோஸ்டர்ஸ் படித்து வரும் நிலையில், இண்டர்ஷிப் பயிற்சிக்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ரெஸ்டாரண்டில் மூன்று மாதத்திற்கு முன் சேர்ந்துள்ளார்.

கடந்த 14ஆம் தேதி இரவு, அந்த பெண் தனது பணியை முடித்துவிட்டு அபுபேலஸ் ரெஸ்டாரன்ட் பின்புறம் உள்ள விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அப்பெண்ணை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பின் கோபத்தில் தான் வைத்திருந்த மதுபான பாட்டிலால் அந்த பெண்ணின் முகத்தில் அடித்துள்ளார். இதில் அந்த பெண் சாலையில் கீழே விழுந்துள்ளார். பின்பு அந்த இளைஞர் பாட்டிலை உடைத்து முகத்தில் பலமாக தாக்கியுள்ளார். மேலும், கைகளால் அந்தப் பெண்ணின் வயிறு மற்றும் கழுத்தில் தாக்கி உள்ளார்.

வலியில் இளம்பெண் கூச்சலிடவே அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வர அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடினார். ரத்த வெள்ளத்தில் துடித்த அந்த இளம் பெண்ணை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முகம், கழுத்துபகுதி, கை என 25 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து தகவலறிந்த கீழ்ப்பாக்கம் காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, இளம்பெண்ணை கொலை செய்யும் நோக்கோடு பாட்டிலால் அடித்து காயப்படுத்திய வேப்பேரியை சேர்ந்த நவீன் என்ற இளைஞரை கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக அப்பெண்ணுடன் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் முகநூலில் நண்பரான இளம் பெண்ணை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் பார்த்ததாகவும், அப்போது தன்னை நேவியில் வேலை செய்வதாக கூறி அறிமுகப்படுத்தி கொண்டதாக கூறினார்.

மேலும், இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் நவீன் அப்பெண்ணை காதலிப்பதாக தெரிவித்த போது, பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என இளம்பெண் தவிர்த்து வந்துள்ளதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறொரு இளைஞரிடம் பேசுவதாக வந்த தகவலை அறிந்து நவீன் ஆத்திரத்தில் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து,இளம்பெண் தங்கி இருக்கும் இடத்திற்கு சென்று நவீன் தொல்லை கொடுத்து தகராறில் ஈடுபட்டதால் முற்றிலுமாக நவீனை தவிர்த்து வந்துள்ளதாகவும், இதனால் தனக்கு கிடைக்காத பெண் யாருக்கு கிடைக்கக்கூடாது என்ற நோக்கத்தோடு அவரை தாக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் நவீனிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 'ஆக்கிரமிப்பை எடுத்தால் தலை இருக்காது' - விஏஓவுக்கு மிரட்டல் விடுத்த வீடியோ!

Last Updated : Nov 17, 2022, 6:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details