தமிழ்நாடு

tamil nadu

குமரி கடலுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

By

Published : Dec 19, 2020, 4:29 PM IST

சென்னை: வடகிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று அடுத்த 3 நாட்களுக்கு குமரிக் கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் குமரிக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Chennai Meteorological Center
Chennai Meteorological Center

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கன்னியாகுமரி கடல் பகுதியில் வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும், ஏனைய வட மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும். அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் லேசான மழையும், வடமாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும். சென்னை புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழையாக நாகப்பட்டினம் 13 செ.மீ, திருப்பூண்டி (நாகப்பட்டினம்), பரங்கிப்பேட்டை (கடலூர்) தலா 7 செ.மீ, தலைஞாயிறு (நாகப்பட்டினம்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), திருத்துறைப்பூண்டி ( திருவாரூர்) தலா 6 செ.மீ, அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரை வடகிழக்கு திசையிலிருந்து பலத்த காற்று அடுத்த 3 நாட்களுக்கு குமரிக் கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் குமரி கடல் பகுதிகளில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details