தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நில அபகரிப்பு வழக்கு - நீண்டகாலமாக காத்திருக்கும் மனுதாரர்கள் நிலை என்ன? - undefined

சென்னை: நில அபகரிப்பு தொடர்பான வழக்குகளை சம்பந்தப்பட்ட ஆளுகைக்குட்பட்ட நீதிமன்றங்களுக்கு மாற்றிய உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : Aug 29, 2019, 10:11 PM IST

பொதுமக்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக அபகரிக்கும் புகார்களை விசாரிக்க, தமிழ்நாடு முழுவதும் கடந்த 2011ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசாணைகளை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், நில அபகரிப்பு தொடர்பான வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருவதால் நிலத்தை பறிகொடுத்த புகார் தாரர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறி, நில அபகரிப்பு தொடர்பான 82 வழக்குகளையும், சம்பந்தப்பட்ட ஆளுகைக்கு உட்பட்ட நீதிமன்றங்களுக்கு மாற்ற உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என, நில அபகரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முருகேசன் மற்றும் வழக்கறிஞர் கணேசன் ஆகியோர் சார்பில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் முறையிடப்பட்டது.

கணேசன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ஏற்கனவே நில அபகரிப்பு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், வழக்குகளை சம்பந்தப்பட்ட ஆளுகைக்குட்பட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக மனுத்தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details