இந்தியா - ஜப்பான் இடையேயான பொருளாதார உறவை மேம்படுத்த சென்னையில் கார் உற்பத்தி தொழிற்சாலை தொடங்க தமிழ்நாடு அரசுக்கும், நிசான் மற்றும் ரெனால்ட் கார் உற்பத்தி நிறுவனங்களுக்கும் இடையில் 2008ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. 6,100 கோடி ரூபாய் முதலீட்டில் உற்பத்தி செய்யப்படும் 4 லட்சம் கார்களுக்கு, தமிழ்நாடு அரசு, முழு வரிச்சலுகையை வழங்கும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தாகி 7 ஆண்டுகள் கடந்தும் தமிழ்நாடு அரசு வரிச்சலுகையை தரவில்லை. மொத்தம் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரிச்சலுகையை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என இரண்டு நிறுவனங்களும் மத்திய அரசிடம் முறையிட்டது. அதேபோல சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடர்ந்தன.
இந்நிலையில், 5 ஆயிரம் கோடி ரூபாய் வரிச் சலுகையை பெற்றுத் தரக் கோரி நிசான் நிறுவனம், சர்வதேச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் முன்னாள் தொழிற்துறை முதன்மை செயலாளர் அதுல்யா மிஸ்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.