தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலமோசடி வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்டவர் ஆஜராகவில்லையெனில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் - எழும்பூர் நீதிமன்றம் - chennai egmore court warning accused regarding land fraud issue

சென்னை: நிலமோசடி வழக்கு விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட திருவிதாங்கூர் மகாராஜா உட்பட 3 பேர் ஆஜராகவில்லை எனில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என சென்னை எழும்பூர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சென்னை
சென்னை

By

Published : Jan 11, 2021, 10:28 PM IST

சென்னை அடையாறு பகுதியில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு சொந்தமாக 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தன. அதில் 171 சென்ட் நிலத்தை தனியார் நிறுவன அதிபரான சுப்பையா என்பவருக்கு 1994ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மகாராஜா குடும்பத்தினர் விற்பனை செய்துள்ளனர். இந்த நிலத்தை போலி ஆவணம் மூலம் கடந்த 2006ஆம் ஆண்டு மறு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னை தீராததால், 2013ஆம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த உத்தராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, கெளரி பார்வதி பாய், அஸ்வதி திருநாள் கெளரி லட்சுமி பாய், அஸ்வதி திருநாள் ராமவர்மா, மூலம் திருநாள் ராமவர்மா, அவிட்டம் திருநாள் ஆதித்ய வர்மா ஆகிய 6 பேர் மீதும் நிலத்தை வாங்கிய ஏ.சி.ஆர்.ராஜ் கணேசன், பி.ஆர்.ராம்பிரபு ராஜு உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கில் 7 வருடங்கள் கழித்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

இந்நிலையில் இன்று (ஜனவரி 11), எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி நாகராஜ் முன்பு திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த அஸ்வதி திருநாள் ராம வர்மா, அவிட்டம் திருநாள் ஆதித்ய வர்மா மற்றும் நிலத்தை வாங்கிய ஏ.சி.ஆர்.ராஜ் கணேசன், பி.ஆர்.ராம்பிரபு ராஜ் ஆகியோர் ஆஜராகி முதலில் பிணை பெற்றுள்ளனர்.

பின் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால் விசாரணைக்கும் ஆஜராகியுள்ளனர். மீதமுள்ள நான்கு பேரில் தற்போதைய மன்னரான மூலம் திருநாள் ராம வர்மா, கெளரி பார்வதி பாய், அஸ்வதி திருநாள் கெளரி லட்சுமி பாய், ஆகியோர் ஆஜராகவில்லை.

எனவே, வருகிற பிப்ரவரி ஆறாம் தேதி வழக்கை ஒத்திவைப்பதாகவும், அப்போது மீதமுள்ள 3 பேர் ஆஜராக வேண்டும் இல்லையெனில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார். இதனிடையே இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்ட்ட உத்தராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details